தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்: வேட்பாளரின் வினோத வாக்குறுதி!
தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என்று வேட்பாளர் ஒருவர் வினோத வாக்குறுதி அளித்துள்ளார்.
தேர்தலில் வென்றால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வினோத வாக்குறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்காக பிரசாரம் நடைபெற்றுவருகிறது.
மத்திய மகராஷ்டிரத்தின் மராத்வாடா பகுதியில் நடந்த பிரசாரத்தின்போது சரத்பவார் அணியின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைப்பதாக வினோத வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார்.
இந்த வாக்குறுதியை அளித்திருப்பவர் ரஜேசாப் தேஸ்முக். இவர் பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் பிரசாரத்தின் போது ஆண்களுக்கு திருமணம் செய்வதற்கு பெண் கிடைப்பதில்லை. அதற்கு தீர்வுகாண வழிசெய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் விவசாயத் துறை அமைச்சரான தனஞ்செய முண்டேவை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.
இதுகுறித்து ரஜேசாப் தேஸ்முக் பிரசாரத்தில் பேசுகையில், “வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம். திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைப்போம். திருமணத்திற்கு பெண் தேடும்போது மணமகனுக்கு வேலை இருக்கிறதா என்றுதான் மக்கள் முதலில் கேட்பார்கள்.
இந்த மாவட்டத்தில் விவசாயத் துறை அமைச்சரான தனஞ்செய முண்டேவுக்கே வேலையில்லாத போது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்” என்றார்.
தனஞ்செய முண்டே வெற்றிபெற்றதில் இருந்து இதுவரை இந்தத் தொகுதியில் ஒரு தொழிற்சாலையும் கொண்டுவரவில்லை. இதனால் வேலைவாய்ப்பில்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.