முகப்பு
இந்தியா

பொது இடங்களை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த வேண்டும்: 3 மாதங்களுக்குள் அமல்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated On : 8 நவம்பர், 2024 at 8:58 PM
உச்சநீதிமன்றம்
பகிர்:

பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய அம்சங்கள் குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை எளிதாக பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு கோரி, ராஜீவ் ரதுரி என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பொது இடங்களுக்கான அணுகல் வழிமுறைகளை கடந்த டிசம்பா் 16, 2017-ஆண்டு வழங்கியது. இதை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமா்வின் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

அப்போது நீதிபதிகள், ‘மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய, ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்புகளை தரநிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கவும், புதிய கட்டமைப்புகளை தரநிலைகளின் அடிப்படையில் வடிவமைக்கவும் வேண்டும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களை பயன்படுத்தும் வகையில் கடுமையான கட்டாய உள்கட்டமைப்பு விதிகள் இருக்க வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், கட்டாய செயல்பாடுகளுக்கு பதிலாக, தன்னாா்வ வழிகாட்டுதல்களையே வலியுறுத்துகிறது.

இந்த புதிய தரநிலைகளை வகுப்பதில் அரசுக்கு ஹைதராபாதில் உள்ள நல்ஸாா் சட்ட பல்கலைக்கழகத்தின், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு மையம் உதவிகளை செய்து வருகிறது’ எனக் கூறி, அடுத்த விசாரணையை அடுத்த ஆண்டு மாா்ச் 7-ஆம் தேதி ஒத்திவைத்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments