முகப்பு
இந்தியா

அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல்

பிரதமர் மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக ராகுல் காந்தி விமர்சனம்.

Updated On : 14 நவம்பர் 2024, 8:18 pm IST
அரசியலமைப்புப் புத்தகத்துடன் ராகுல் காந்தி - PTI
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி வெறுமனே அரசியலப்புப் புத்தகத்தைக் காட்டி அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.

Advertisement

Advertisement

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது,

''பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்க்கையில் இந்திய அரசியலமைப்பச் சட்டத்தை படித்திருக்கமாட்டார். அதனால், அவருக்கு அரசியலமப்புப் புத்தகம் வெற்று புத்தகமாகத் தெரிகிறது.

அரசியலமைப்புப் புத்தகம் வெறுமையானது அல்ல. ஆயிரம் ஆண்டுகால சிந்தனைகளை உள்ளடக்கியுள்ளது.

இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது அவருக்குத் (நரேந்திர மோடி) தெரியாது. அதனால்தான் இதனை வெற்றுப் புத்தகம் என்கிறார். ராகுல் சிவப்பு புத்தகத்தை காண்பிப்பதாக மோடி பேசுகிறார்.

இது எந்த வண்ணத்தில் உள்ளது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதே முக்கியம். இது எதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறதோ அதற்காக உயிரையும் கொடுக்கத் தயாராகவுள்ளோம்.

பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி... - PTI

அரசியலமைப்பைக் காப்பதற்கான போராட்டம்

பிரதமர் மோடிக்கு நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது வெறுமையானது அல்ல. இதனை வெற்றுப்புத்தகம் எனக் கூறினால், பிர்சா முண்டா, அம்பேத்கர், காந்தியடிகள் உள்ளிட்டோரை அவமதிப்பது போன்றது. இதனைக் காப்பதற்காகத்தான் இந்த போராட்டம்.

உங்கள் நிலங்களைப் பாதுகாக்க நிலம் கையகப்படுத்தும் மசோதாவை காங்கிரஸ் கொண்டுவந்தது. பழங்குடிகள் உரிமைச் சட்டமானது காடுகள், நிலம் மற்றும் நீர் வளங்களில் பழங்குடி மக்களுக்கு உள்ள உரிமையை உறுதி செய்தது.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும், பழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களை முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டது.

வனவாசி என்ற சொல், உங்கள் குழந்தைகள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, தொழில்முனைவோராகவோ ஆகக் கூடாது என்பதைக் குறிக்கிறது. மாறாக ஆதிவாசி என்ற சொல் உங்கள் குழந்தைகள் எதனையும் சாதிக்க வழிவகை செய்கிறது. ஆதிவாசிக்கும் வனவாசிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

இந்திய அரசாங்கத்தின் எத்தனை ஆதிவாசிகள் உள்ளனர். இந்திய அரசாங்கம் 100 ரூபாயை ஒதுக்கினால், அதனை எதற்கெல்லாம் செலவிட வேண்டும் எனக் கூறுபவர்களில் எத்தனைபேர் ஆதிவாசியாக உள்ளனர்.

அவர்களுக்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? இதனை மாற்ற வேண்டும். இதற்காகத்தான் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்கிறது காங்கிரஸ்'' என ராகுல் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | தில்லி புதிய மேயராக மகேஷ் குமார் கிச்சி தேர்வு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.