தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்?

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால் அடுத்த முதல்வர் யார்? என்பது கேள்வியாகியிருக்கிறது.

DIN

அடுத்த 2 நாள்களில் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று அரவிந்த் கேஜரிவால் அறிவித்திருக்கும் நிலையில், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

பிணையில் விடுதலையாகி வெளியே வந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்த் கேஜரிவால், கட்சியின் மூத்த தலைவா்களுடன் தில்லியின் அரசியல் சூழல் மற்றும் ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டிருந்தாா். இந்நிலையில், தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் புதிய தலைமையகத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவா்களுடன் இணைந்து நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றியபோதுதான், யாரும் எதிர்பாராத வகையில், ராஜிநாமா முடிவை அறிவித்திருந்தார்.

இதனால், அரவிந்த் கேஜரிவாலைத் தொடர்ந்து தில்லியின் அடுத்த முதல்வராக அமரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேவேளையில் மணீஷ் சிசோடியாவும் தானும் பதவியில் அமர மாட்டோம் என்று கேஜரிவால் கூறிவிட்டதால், அடுத்த முதல்வர் என்ற இடத்தில் மணீஷ் சிசோடியா இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

தற்போதைய சூழ்நிலையில், தில்லி அமைச்சரும், கல்வி நிலைக்குழு தலைவருமான அதிஷி, முதல்வர் போட்டியில் முன்னிலையில் உள்ளார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறையில் இருந்தபோது, தில்லி நிர்வாகத்தை சிறப்பாகக் கையாண்டு வந்ததால், இவர் முதல் வரிசையில் உள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சர் கோபால் ராய் உள்ளார். 49 வயதாகும் கோபால் ராய், ஆம் ஆத்மியில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டிருப்பவர், மாணவர் அமைப்பில் பணியாற்றி, அமைச்சராகி, தொழிலாளர் சமுதாயத்தினருடன் நெருங்கிய தொடர்பிருப்பதால் இவரது பெயரும் பேசப்பட்டு வருகிறது.

தில்லி அரசியல் வட்டாரத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லாட் மிக முக்கிய நபராக விளங்குகிறார். இவரது தலைமையின்கீழ், தில்லி அரசு, சாலைப்போக்குவரத்தில் பல முக்கிய மைல்கல்களை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுனிதா கேஜரிவால்

முன்னாள் வருவாய் துறை அதிகாரியான சுனிதா கேஜரிவால், அவரது கணவரைப் போலவே, வருமான வரித்துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். தில்லி முதல்வர் கேஜரிவால் சிறையில் இருந்த போது ஆம் ஆத்மிக்காக மக்களவைத் தேர்தலில் தில்லி, ஹரியாணா, குஜராத் மாநிலங்களில் சிறப்பாக பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

அவ்வப்போது, கேஜரிவால் எழுதிய கடிதங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்தும், கேஜரிவாலின் குரலாக இருந்துவந்துள்ளார். இந்திய கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும், ஆம் ஆத்மி சார்பில், இவர்தான் பங்கேற்றிருந்தார். இவருக்கும் நிர்வாகத்தில் திறமை இருப்பதால், தில்லி நிர்வாகத்தை கையாள்வதிலும் எளிதாக இருக்கும் என்பதால் இவரும் முதல்வர் பதவியில் அமரவைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தில்லிக்கு எப்போது தேர்தல்?

தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடக்கவுள்ளது. ஆனால், தில்லி தோ்தலை மகாராஷ்டிரத்துடன் சோ்த்து நவம்பா் மாதத்திலேயே நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன், மக்கள் எனக்கு நோ்மை சான்றிதழ் கொடுத்த பிறகுதான் முதல்வா் நாற்காலியில் அமருவேன். பாஜக என்னை ஊழல்வாதி என்று மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறாா்கள். பாஜகவால் மக்களுக்கு நல்ல பள்ளிகள் மற்றும் இலவச மின்சாரம் வழங்க முடியவில்லை.ஏனென்றால், அவா்கள் ஆளும் மாநிலங்களில் ஊழல் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த ஓரிரு நாள்களில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, அதில், கட்சித் தலைவா் ஒருவா் தில்லியின் புதிய முதல்வராக பதவியேற்பாா். முதல்வா் பதவியை அடுத்த இரண்டு நாட்களில் நான் ராஜிநாமா செய்யப்போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

சிறையில் இருக்கும்போது, அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிணையில் வெளியே வந்து தனது ராஜிநாமா முடிவை அறிவித்திருக்கிறார் கேஜரிவால்.

அரவிந்த் கேஜரிவால் வெளியே வந்ததால், மகிழ்ச்சியில் இருந்த ஆம் ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!

சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்!

கெனிஷா கடவுள் கொடுத்த வரம்: ரவி மோகன்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

SCROLL FOR NEXT