முகப்பு
இந்தியா

பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு முக்கிய காரணம் இதுதான்! அதிரும் பின்னணி!!

பெங்களூரு மகாலட்சுமியின் கொலைக்கு முக்கிய காரணம் பலருடன் நட்பு, காதல் என்று கூறப்படுகிறது.

Updated On : 27 செப்டம்பர் 2024, 12:19 pm IST
பெங்களூரு மகாலட்சுமி
பகிர்:

பலருடன் நட்பு, காதல், திருமண திட்டங்கள், வாக்குவாதம், தீராத ஆத்திரம் போன்றவைதான், பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தில்லியில், ஒன்றாக வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்கள் பல்வேறு இடங்களில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான செய்திகள் மற்றும் விடியோக்களை, மகாலட்சுமி கொலையானி முக்தி சமூக ஊடகம் வாயிலாக பார்த்திருக்கலாம் என்றும், அதனால்தான், மகாலட்சுமியைக் கொன்றதும் உடலை துண்டுத் துண்டாக வெட்டி வீச திட்டமிட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிக்க.. ஹத்ராஸ் பயங்கரம்: பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவன் நரபலி!

மகாலட்சுமி செப்டம்பர் 3ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, 59 துண்டுகளாக வெட்டப்பட்டு, குளிர்பதனப் பெட்டியில் சுமார் 18 நாள்கள் இருந்துள்ளன. மிகக் கூர்மையான கத்தியால், முக்தி, இந்த படுபாதகச் செயலை செய்திருக்கிறார். கொலை செய்துவிட்டு, அடுத்த நாளே பெங்களூருவை விட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்.

Advertisement

Advertisement

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக முக்தியும் மகாலட்சுமியும் ஒன்றாக பழகியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது உறவு சரியாக போகவில்லை. இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்துவந்த நிலையில், ஒரு சில நாள்கள் அடிதடியிலும் முடிந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 3ஆம் தேதி சம்பவத்தன்று, முக்தி, மகாலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார். மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முக்தியை திருமணம் செய்துகொள்ள மகாலட்சுமி வற்புறுத்தியிருக்கிறார். அப்போதுதான் சண்டையில் முக்தி கொலை செய்திருக்கிறார். அன்று இரவு முழுக்க மகாலட்சுமியின் உடலை எவ்வாறு அழிப்பது என்று விடியோவாக பார்த்திருக்கிறார் முக்தி.

செப்டம்பர் 4ஆம் தேதி காலை, கடைக்குச் சென்று மிகக் கூர்மையான கத்தியை வாங்கி வந்துள்ளார் முக்தி. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன. பிறகுதான், உடலை துண்டுத்துண்டாக வெட்டிவிட்டு, மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் ஒடிசா தப்பிச் சென்றிருக்கிறார். தான் கொலை செய்துவிட்டதை தனது சகோதரனுக்குத் தெரிவித்துவிட்டு ஒடிசா புறப்பட்டுள்ளார். ஒடிசாவில், அவரது செல்போன் ஆக்டிவ் ஆனதை வைத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்ய முயன்றுள்ளனர்.

ஆனால், அதற்குள், முக்தி தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகாலட்சுமி ஏற்கனவே ஹேமந்த் என்பவருடன் திருமணமாகி ஒரு இளம் வயது மகளும் இருக்கிறார். இதற்கிடையே அஷ்ரப் என்பவருடன் மகாலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இதனால் முக்தி, மகாலட்சுமியை திருமணம் செய்ய தயங்கியிருக்கிறார். ஆனால், மகாலட்சுமி திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தொடர்ந்து சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மகாலட்சுமியின் செல்போனில் வேறொரு நபரின் புகைப்படம் இருந்ததைப் பார்த்து முக்தி சண்டை போட்டுள்ளார். மகாலட்சுமியின் பழக்க வழக்கம் குறித்து ரஞ்சன் தனது சகோதரர் ஸ்மிருதி ரஞ்சனுடன் பேசியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்மிருதி ரஞ்சனின் வாக்குமூலத்தையும் காவல்துறையினர் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் சொன்ன தகவலும், முக்தி எழுதிய தற்கொலைக் கடிதமும் ஒன்றாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.