புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?
பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல்...
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நாடுகளுக்குமிடையில் ‘ரஃபேல் ஒப்பந்தம்’ இன்று கையெழுத்தானது.
இதன்கீழ், மொத்தம் 26 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு அளிக்கப்படும். இந்த விமானங்கள் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளன. பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங், கடற்படை துணை தளபதி அட்மிரல் கே. சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
முதல்கட்டமாக, போர் விமானங்களை வாங்குவதற்காக செலுத்த வேண்டிய மொத்த தொகையில் 15 சதவீதத்தை பிரான்ஸிடம் இந்திய அரசு வழங்கும் என்றும், அடுத்த 37 முதல் 65 மாதங்களில் அனைத்து விமானங்களும் இந்தியாவுக்கு தயாரித்து அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்திய கடற்படை அரபிக் கடல் பகுதியில் நேற்று ஏவுகணை ஒத்திகை நடத்தி, தயார் நிலையில் இருப்பதை வெளிக்காட்டியிருந்தது. இந்த நிலையில், கடற்படையை மேலும் பலப்படுத்தும் விதமாக, ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் ஏற்கெனவே திட்டமிட்டபடி இன்று கையெழுத்தாகியுள்ளது.