முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என்றும் அழைக்கப்படும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி காலமானார்.
அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு அரசு சார்பில் தேசிய நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டை, பயண விவரக் குறிப்புகள், பல்வேறு பல்கலைக் கழகங்களில் அவர் ஆற்றிய உரைகள் உள்ளிட்ட தனிப்பட்ட ஆவணங்களை அவரது குடும்பத்தினர் தேசிய ஆவணக் காப்பகத்துக்கு தானமாக வழங்கினர்.
இதுகுறித்து, அவரது உறவினரான ஏ.பி.ஜே.எம். நஸீமா மரைக்காயர், ஏ.பி.ஜே.எம்.ஜே. ஷேக் சலீம் மற்றும் தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இயக்குநர் அருண் சிங்கால் ஆகியோருக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ரூ.1 லட்சம்! அரசு அதிரடி அறிவிப்பு!