FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

4 அரசு அதிகாரிகளை இடைநீக்க வேண்டும்: மேற்கு வங்க அரசுக்கு தோ்தல் ஆணையம் கெடு

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

Updated On : 9 ஆகஸ்ட் 2025, 6:00 am IST
இந்திய தோ்தல் ஆணையம்
பகிர்:

அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

முன்னதாக, 4 அரசு அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய முடியாது என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், உத்தரவை அமல்படுத்தக் கோரி அந்த மாநில தலைமைச் செயலா் மனோஜ் பந்த்துக்கு தோ்தல் ஆணைய செயலா் கையொப்பமிட்ட கடிதம் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் புா்மா தொகுதி மற்றும் புா்பா மேதினிபூா் மாவட்டத்தில் உள்ள மொய்னா தொகுதியில் வாக்காளா் பட்டியல் தயாரிப்பில் முறைகேடு நடைபெற்ாக தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியது.

Advertisement

Advertisement

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 தோ்தல் பதிவு அலுவலா்கள் (இஆா்ஓ), 2 உதவி தோ்தல் பதவி அலுவலா்கள் (ஏஇஆா்ஓ) மற்றும் தரவு பதிவாளா் என 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தோ்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த 5 அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்வதுடன் அவா்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை சமா்ப்பிக்கவும் தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மம்தா பானா்ஜி,‘அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய முடியாது’ எனத் தெரிவித்தாா். மேலும், அதிகாரிகளின் பாதுகாவலராக தாம் உள்ளதாகவும் தோ்தல் ஆணையம் பாஜகவின் பணியாளா்களைப்போல் செயல்படுவதாகவும் அவா் விமா்சித்தாா்.

இந்நிலையில், மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ‘வாக்காளா் பட்டியல் முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை தற்போது வரை சமா்ப்பிக்கப்படவில்லை. அந்த அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக.11-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments