இந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்
சோனியா காந்தியின் வாக்குரிமை மீதான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம்
இந்தியாஇந்த ஆதாரமே பொய்! - சோனியா காந்தியின் வாக்குரிமை பற்றி காங்கிரஸ் விளக்கம்
சோனியா காந்தியின் வாக்குரிமை மீதான குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்குரிமை பெற்றதாக பாஜக கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
மக்களவை தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
இதற்கு தேர்தல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மறுப்பும் தெரிவித்துள்ளது.
அதேபோல பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்திய குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக பாஜக குற்றச்சாட்டை முன்வைத்தது.
1980 ஆம் ஆண்டு சோனியா காந்தி இத்தாலி குடிமகளாக இருந்தபோது, அதாவது இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்துள்ளதாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் பாஜக தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா அதற்கான ஆதாரத்தையும் சேர்த்து வெளியிட்டார். இதுகுறித்து பாஜகவினர் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இந்த ஆதாரம் பொய்யானது என காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"போலிச் செய்திகளைப் பரப்புபவர்,
1991 ஆம் ஆண்டின் 69-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக தில்லி யூனியன் பிரதேசம்(Union Territory of Delhi), 'தேசிய தலைநகர் பகுதி'(National Capital Territory) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது 1992 பிப்ரவரி 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
1980-ல் இது தில்லி யூனியன் பிரதேசமாக இருந்தது.
1992-க்குப் பிறகே தில்லியில் சிறப்பு நிர்வாகம், சட்டமன்றம், அமைச்சர்கள் குழு உருவானது.
நீங்கள் தொடர்ச்சியாக பொய்களை பரப்புபவர்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
அமித் மால்வியா வெளிட்ட அந்த ஆதாரத்தில், '1980 ஆம் ஆண்டு- தேசிய தலைநகர் பகுதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரள காங்கிரஸ் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"உங்களுடைய போட்டோஷாப் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு தவறு மட்டும் அதில் இருக்கிறது. 1991-ல்தான் 69-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலமாக தில்லி தேசிய தலைநகர் பகுதி(NCT) உருவாக்கப்பட்டது. 1980-ல் தில்லி யூனியன் பிரதேசம்.
நரேந்திர மோடியிடம் இதைவிட நல்ல ஐடியா கொடுக்கச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளது.