மெட்ரோ ரயிலில் சக பயணி ஏறும் வரை கதவு மூடி விடாமல் தடுத்த பெண் மீது நடவடிக்கை!
மெட்ரோ ரயிலில் சக பயணி ஏறுவதற்காக கதவை மூட விடாமல் தடுத்த பெண் மீது நடவடிக்கை!
கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் சக பயணி ஒருவர் ஏறுவதற்காக, ரயில் பெட்டியின் கதவை மூட விடாமல் தடுத்த ரயிலில் இருந்த பெண் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவின் டம்டம் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை(டிச. 13) மெட்ரோ ரயில் ஒன்று புறப்படத் தயாரானபோது, அந்த ரயிலில் ஏறுவதற்காக விரைந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணிக்காக அந்த ரயிலின் ஒரு பெட்டியில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர், ரயில் கதவு மூடாமல் இருக்கும்படி தடுத்து நிறுத்தினார். இதனால் அந்த தானியங்கி கதவு திறந்தபடியே இருந்ததால் ரயில் குறித்த நேரத்தில் புறப்படவில்லை. அங்கேயே நின்றது.
இதையடுத்து ரயில் மோட்டார்மேன் அந்த பெட்டிக்குச் சென்று அதன்பின் அந்தக் கதவை தொழில்நுட்ப உதவியுடன் மூடிய பிறகே அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் சக பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பிலிருந்து இன்று(டிச. 14) பேசிய செய்தித்தொடர்பாளர், “மெட்ரோ ரயில்வே விரைவான மற்றும் சௌகரியமான சேவையை அனைத்து பயணிகளின் ஒத்துழைப்புடன் வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரயில் கதவுகளை பயணிகள் தாங்கள் உடன் எடுத்துச் செல்லும் பை அல்லது உடல் வலுவாலோ அல்லது கதவில் சாய்ந்தபடி தடுப்பதாலோ எவ்வழியிலும் கதவுகள் மூடாமல் இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது அபராதமும் நடவடிக்கையும் பாயும்.
சிசிடிவி கேமிராக்கள் உதவியுடன் இது போன்ற செயல்கலில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.