ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!
நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி...
ஹிஜாப் விவகாரம்: பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கியது தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிகார் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் அகற்றியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுதொடர்பான வெளியான விடியோவில், பெண் மருத்துவரிடம் எதோ கூறும் நிதீஷ், திடீரென்று அவரது அனுமதியின்றி ஹிஜாப்பை இழுத்து விலக்கினார். மேடையில் இருந்தவர்கள் இந்த செயலைக் கண்டு சிரித்த நிலையில், உடனடியாக அப்பெண்ணை மேடையில் இருந்து பெண் காவலர் ஒருவர் கூட்டிச் சென்றார்.
இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் உள்ள கைசர்பாக் காவல் நிலையத்துக்கு நேரில் சென்ற சமாஜவாதி கட்சியின் மூத்த நிர்வாகி சுமையா ராணா, இந்த புகாரை அளித்தார்.