கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் ஜெய்சங்கர் பங்கேற்பு! மோடியின் கடிதம் மகனிடம் ஒப்படைப்பு!
வங்கதேச முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு...
மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டாக்கா நகரத்துக்குச் சென்றுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரும், கொல்லப்பட்ட அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியுமான கலீதா ஜியா, உடல் நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (டிச. 30) காலை காலமானார்.
இதனைத் தொடர்ந்து, அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், தலைநகர் டாக்காவில் இன்று (டிச. 31) நடைபெறும் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். அந்த நிகழ்வில், இந்திய அரசின் சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார்.
இதையடுத்து, வங்கதேச முன்னாள் பிரதமரின் மறைவுக்கு பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ஒப்படைத்ததாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மறைவுக்கு மத்திய அரசு மற்றும் இந்திய மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.