முகப்பு
இந்தியா

கும்பமேளாவில் இரட்டிப்பு லாபம் கண்ட நிறுவனங்கள்!

கும்பமேளாவில் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் செயல்பட்ட நிறுவனங்கள்...

Updated On : 27 பிப்ரவரி, 2025 at 6:22 PM
கும்பமேளா இறுதிநாளில் கூடிய பக்தர்கள் கூட்டம் - PTI
பகிர்:
Updated On : 27 பிப்ரவரி, 2025 at 6:12 PM

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால், அவர்களுக்கு உதவும் வகையில் பல முன்னணி நிறுவனங்கள் பிரயாக்ராஜில் இருந்தன.

மகா கும்பமேளாவைப் பயன்படுத்தி களத்தில் செயல்பட்டு உள்ளூர் மக்களிடையேயும் தங்கள் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக்கொள்ளும் வகையில் அந்நிறுவனங்கள் இதனைச் செய்திருந்தன.

Advertisement

இதில் பல இந்திய நிறுவனங்களாக இருந்தாலும், உள்ளூர் மக்களிடையே சென்று சேராத நிலையில், கும்பமேளாவை அவை பயன்படுத்திக்கொண்டன. இதில் மக்களும் பயன் அடைந்தனர் என்பதை மறுக்கமுடியாது. மக்களிடம் விளம்பரமும் நடந்தது, வியாபாரமும் நடந்தது. அந்தவகையில் இந்நிறுவனங்களுக்கு இரட்டிப்பு லாபம்தான்.

Updated On : 27 பிப்ரவரி, 2025 at 6:16 PM

ஸ்விக்கி

மகா கும்பமேளா நடைபெறக்கூடிய இடத்தில் மிகப் பெரிய எஸ் வடிவத்தை ஸ்விக்கி நிறுவியது. மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான முக அடையாள தொழில்நுட்பம், கியூஆர் கோட் போன்றவற்றையும் நிறுவியிருந்தது. கூட்டத்தில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கூட்டத்தில் காணாமல்போனால் அவர்களை இந்த எஸ் வடிவ அமைப்பு இணைக்கும் பகுதியாக செயல்பட்டது.

ரிலையன்ஸ்

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் நுகர்வோர் பொருள்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பக்தர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் வகையில் பணியாற்றியது. இதற்காக பல இடங்களில் கடைகளைத் திறந்திருந்தது.

மேலும் பக்தர்களின் பயணம் சுமூகமாக இருக்கும் வகையில் தகவல் பலகைகள், உதவி மையங்களை நிறுவியிருந்தது.

ரெக்கிட் & பென்கிசர்

தமிழ்நாட்டில் செயல்படும் ரெக்கிட் & பென்கிசர் நிறுவனம் அதன் டெட்டால் நிறுவன சோப்பை கும்பமேளாவில் பக்தர்களுக்காக வழங்கியது. மேலும் 15,000 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்தது.

ஐஐஎஃப்எல் பவுண்டேஷன்

ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஐஎஃப்எல் நிறுவனம் கும்பமேளாவில் 15 படகு ஆம்புலன்ஸ்களை வழங்கியது. படகுகளில் செல்பவர்களுக்கு ஏற்படக்கூடிய அவசரகால மருத்துவ தேவை, புனித நீராடும்போது ஏற்படும் விபத்துகளின்போது அவசர சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இவை பயன்பட்டன.

Updated On : 27 பிப்ரவரி, 2025 at 6:16 PM

வாலினி

பார்மா பொருள்களைத் தயாரித்துவரும் இந்தியாவின் வாலினி நிறுவனம், பிரயாக்ராஜில் மசாஜ் தெரபி முகாம்களை அமைத்திருந்தது. நீண்ட தூரம் பயணம் செய்து, நீண்ட தூரம் நடந்தே திரிவேணி சங்கமத்துக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு இந்த முகாம்கள் உதவிகரமாக இருந்தன.

மேன்கைண்ட் பார்மா

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேன்கைண்ட் பார்மா, கும்பமேளாவின் பல்வேறு பகுதிகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தியது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் இலவசமாக மருத்துவ சேவைகளைப் பெற முடிந்தது. முதியோர் இதில் அதிகம் பலனடைந்தனர்.

பிளிங்கிட்

ஹரியாணாவைச் சேர்ந்த பிளிங்கிட், கும்பமேளா நடைபெற்ற இடத்தில் தற்காலிக கடைகளை அமைத்திருந்தது. புனித நீராட வந்திருந்த பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் எந்தவித சிரமமுமின்றி கிடைக்க வழி வகை செய்தது.

அமேசான்

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள அமேசான், தங்களுடைய அட்டைப் பெட்டிகளைக் கொண்டு பக்தர்களுக்கு தாற்காலிக படுக்கைகளை உருவாக்கித்தந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு இதனை பயன்படுத்திக் கொண்டனர்.

கோகா கோலா

இந்திய சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் கோகோ கோலா நிறுவனம், சுமார் 100 இடங்களில் தங்களுடைய கடைகளை நிறுவியிருந்தது. வெய்யிலில் நடந்துவரும் பக்தர்கள் உடனடியாக குளிர்பானம் அருந்தி தாகம் தணித்துக்கொள்ளும் வகையில் அவை இருந்தன.

இதையும் படிக்க | கும்பமேளா: லாபம் குவித்த 'இன்ஸ்டன்ட்' தொழில்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.