முகப்பு
இந்தியா

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

துப்புரவு பணியாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 16,000-ஆக நிர்ணயிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

Updated On : 27 பிப்ரவரி 2025, 4:17 pm IST
பகிர்:

மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பமேளா புதன்கிழமையுடன் முடிவுயுற்றதையடுத்து, பிரயாக்ராஜ் மக்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, ``பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த 2 மாதங்களாக, மகா கும்ப நிகழ்வை, தங்கள் வீட்டு விழாவாக பிரயாக்ராஜ் மக்கள் கருதினர். இந்த நகரத்தில் 20 முதல் 25 லட்சம் மக்கள் உள்ளனர். இந்த நிலையில், 5 முதல் 8 கோடி பேர் ஒரே நேரத்தில் வரும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டம் உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை.

Advertisement

Advertisement

மகா கும்பத்தில் மொத்தம் 66.30 கோடி பக்தர்கள் பங்கேற்றனர், ஆனாலும் கடத்தல், கொள்ளை போன்ற குற்றங்கள் எதுவும் மகா கும்பத்தில் நடக்கவில்லை. நுண்ணோக்கியை வைத்துக்கூட, எதிர்க்கட்சியால் மகா கும்பத்தில் குற்ற வழக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த அளவிலான ஒரு வரலாற்று நிகழ்வு அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

மௌனி அமாவாசையில் மட்டும் 8 கோடி பக்தர்கள் கூடியிருந்தனர். மகா கும்ப விழாவில் பணியாற்றிய துப்புரவு மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஏப்ரல் முதல் துப்புரவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 16,000 வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரின் சுகாதாரப் பாதுகாப்புக்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனாவுடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள். இதன்மூலம், அவர்களுடைய சிறந்த நலன் மற்றும் ஆதரவை உறுதி செய்யப்படும். அனைத்து ஊழியர்களும் ஆயுஷ்மான் யோஜனாவுடன் இணைப்பதன் மூலம் ஜன் ஆரோக்யா பீமாவின் பலன்களைப் பெறுவார்கள்’’ என்று தெரிவித்தார்.

பௌஷ பொ்ணமியை முன்னிட்டு கடந்த ஜன. 13 தொடங்கி, 45 நாள்களுக்கு நடைபெற்ற இந்த மகத்தான விழாவில் 66 கோடிக்கும் மேற்பட்டோா் புனித நீராடி வழிபட்டனா்.

பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடத்தப்பட்டது. எனினும், தற்போதைய வானியல் நிலைகள் காரணமாக 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற நடப்பு கும்பமேளா கூடுதல் சிறப்பு வாய்ந்தது. தொடக்க நாள்களில் பிரயாக்ராஜில் நிலவிய கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினசரி கோடிக்கணக்கான பக்தா்கள் நீராடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.