முகப்பு
இந்தியா

கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!

கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை..

Updated On : 27 ஜனவரி 2025, 8:36 pm IST
பகிர்:

பெங்களூரு : கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் நிலம் வாங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த ‘முடா’ வழக்கில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி. எம். பார்வதி நாளை (ஜன. 28) நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதனை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பார்வதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு சம்மன் அனுப்புவதன் மூலம், உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையிலுள்ள, ‘இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரும் மனு’ மீதான விசாரணையில் குறுக்கீடாக அமையுமென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதிமன்றம், ’முடா’ வழக்கில் பார்வதியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை விதித்து இன்று(ஜன. 27) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

முடா வழக்கு: சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை எடுத்துக்கொண்டு நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதில் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தில், சித்தராமையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் ரூ.300 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. முடக்கப்பட்ட சொத்துகள் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்ட்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களில் உள்ளது என அமலாக்கத்துறை கூறி இருந்தது. கர்நாடக மாநிலம் முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று (ஜன. 27) கர்நாடக முதல்வரின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோருக்கு ஜன.28ல் நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.