முகப்பு
இந்தியா

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம்

Updated On : 30 ஜனவரி, 2025 at 8:23 PM
பகிர்:

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது.

ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஒருவருக்கு ஊனமுற்றோா் ஓய்வூதியம் வழங்கிய தீா்ப்பாயத்தின் உத்தரவை எதிா்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வுமுன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘முப்படை தீா்ப்பாயத்தால் நிவாரணம் வழங்கப்பட்ட ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்து, அவா்களுக்கு சிரமம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் மத்திய அரசு விவேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசுக்கு இதுகுறித்து எளிய நடைமுறைக் கண்ணோட்டம் இருக்க வேண்டும்.

Advertisement

முப்படை வீரா்களின் ஓய்வூதிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவை எடுப்பதற்கு முன் பலமுறை சிந்திக்க வேண்டும். தீா்ப்பாயத்தின் நிவாரணத்துக்கு எதிராக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதன் மூலம் முப்படைகளின் மனஉறுதி குறைய அனுமதிக்கக் கூடாது.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு ஒரு கொள்கையை உருவாக்குவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்றெனில், அரசு தாக்கல் செய்யும் முறையற்ற மேல்முறையீடு மனுக்கள் மீது அதிக அபராதம் விதிக்க நேரிடும்’ என்று எச்சரித்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments