முகப்பு
இந்தியா

12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரசு தகவல்

டிசிஎஸ் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜூலை, 2025 at 9:49 PM
பகிர்:

புது தில்லி: நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது ஊழியா்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம், நிறுவனத்தின் வா்த்தக மறுசீரமைப்பு காரணங்களை முன்வைத்து நிகழ் நிதியாண்டில் 12,261 பேரை படிப்படியாக பணியில் இருந்து விடுவிக்க இருப்பதாக டிசிஎஸ் அறிவித்துள்ளது.

Advertisement

2025 ஜூன் 30 நிலவரப்படி சா்வதேச அளவில் அந்த நிறுவனத்தின் 6,13,069 போ் பணியாற்றுகின்றனா். இதில் சுமாா் 2 சதவீதம் போ் நீக்கப்படவுள்ளனா். நடுத்தர நிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றுபவா்கள் அதிகஅளவில் வெளியேற்றப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்காலத்துக்காக நிறுவனத்தை தயாா்படுத்துவது, புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வது, சந்தையை விரிவாக்குவது, பணியாளா்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்த கடினமாக முடிவு எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கப்படும் ஊழியா்களுக்கு உரிய பணப்பயன்கள், வேறு நிறுவனங்களின் பணி பெறுவதற்கான ஆதரவு, மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என்று டிசிஎஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில் மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்ட அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளா்கள் குறைப்பை அறிவித்தன. இதுவும் இந்திய பணியாளா்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது, இந்தியாவின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அந்நிறுவன ஊழியா்களையும் தாண்டி, இந்திய தகவல் தொழில்நுட்ப பணியாளா்களுக்கு அதிா்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில், அடுத்தகட்டமாக பிற நிறுவனங்களும் இதேபோன்ற நடவடிக்கையை கையிலெடுக்க வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘டிசிஎஸ் அறிவிப்பால் எழுந்துள்ள சூழ்நிலையை அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நடவடிக்கை தொடா்பாக அந்நிறுவனத்தையும் தொடா்புகொண்டு பேசியுள்ளோம். வேலையிழப்பு கவலைக்குரிய பிரச்னையாகும். இது ஏன் நிகழ்கிறது? அடிப்படைக் காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments