மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில், அந்த மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளா்களைவிட கூடுதல் வாக்குகள் பதிவானதாகவும், தோ்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறாா். இதுதொடா்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில், அண்மையில் அவா் கட்டுரை எழுதினாா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு தோ்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், ”நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்கள், விதிமுறைகளைப் பின்பற்றியே அனைத்துத் தோ்தல்களும் நடத்தப்படுகின்றன, அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேச பரஸ்பரம் செளகரியமான தேதியில் தங்களை நேரில் சந்திக்க தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேர்தல்களைக் கண்காணிக்கும் ’ஈகிள்’ குழு வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்கள் திடீரென மிகப்பெரிய அளவில் அதிகரித்தது, வாக்குப்பதிவு நாளில் மாலை 5 மணிக்குப் பிறகு விவரிக்க முடியாத அளவுக்கு வாக்கு சதவிகிதம் அதிகரித்தது குறித்து சந்தேகங்களை நாங்கள் முன்வைத்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2019 பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களைவிட, 2024 மக்களவைத் தேர்தலுக்கும் பேரவைத் தேர்தலுக்கும் இடையே அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னெப்போதும் இதுபோன்று நடந்ததில்லை. புதிய வாக்காளர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?
இதனை முழுமையாக ஆராய மகாராஷ்டிர மக்களவைத் தேர்தல் இறுதி வாக்காளர்கள் பட்டியலையும் 2024 பேரவைத் தேர்தல் பட்டியலையும் ஒப்பிடுவதே சரியான வழி என்று எந்தவொரு பகுத்தறிவுள்ள நபரும் ஒப்புக்கொள்வார்கள். இதைதான் காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் கடந்த 7 மாதங்களாக கேட்கின்றோம்.
இதை வழங்குவதை தவிர, மற்ற அனைத்து பதில்களையும் தேர்தல் ஆணையம் தெரிவித்து வருவது புதிராக உள்ளது. உங்களிடம் இந்த வாக்காளர் பட்டியல்கள் இருக்கிறதா? இல்லையா?. இதனிடையே, வாக்குப்பதிவு நாளில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளையும் கொடுக்க மறுப்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது.
இந்த கடிதம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா வாக்குப்பதிவு விடியோ காட்சிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இதனை பெற்றவுடன் தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் கட்சித் தலைமை சந்திக்கும். அந்த கூட்டத்தில், நாங்கள் கண்டுபிடித்ததை உங்களிடம் முன்வைப்போம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
The Congress party has announced that it is ready to hold a discussion with the Election Commission if it provides the final voter list and polling day video for the Maharashtra Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.