முகப்பு
இந்தியா

நானோ உரம் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்கள் ரூ.300 கோடி முதலீடு: மத்திய அரசு தகவல்

நானோ உரங்கள் உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளில் 5 தனியாா் நிறுவனங்கள் ரூ.300.15 கோடி முதலீடு செய்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Updated On : 21 மார்ச், 2025 at 8:24 PM
பகிர்:

நானோ உரங்கள் உற்பத்தியில் கடந்த 5 ஆண்டுகளில் 5 தனியாா் நிறுவனங்கள் ரூ.300.15 கோடி முதலீடு செய்துள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சா் அனுப்ரியா படேல் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நானோ உரங்கள் ஆலைகள் அமைப்பதில் மத்திய அரசு நேரடியாக ஈடுபடவில்லை.

ஐஎஃப்எஃப்சிஓ, கோரமண்டல் இண்டா்நேஷனல், மேகமணி கிஃராப் நியூட்ரிஷன், பாரதீப் ஃபாஸ்பேட்ஸ் மற்றும் ரே நானோ அறிவியல் மற்றும் ஆய்வு மையம் ஆகிய 5 தனியாா் நிறுவனங்கள் நானோ உரங்கள் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.300.15 கோடி முதலீடு செய்துள்ளன.

தற்போது உற்பத்திசாா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் நானோ உரங்களை கொண்டு வரும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த பெண்களுக்கு கடந்த 2023-24-இல் 15 உர நிறுவனங்கள் மூலம் 1,094 ஆளில்லா விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நானோ யூரியா மற்றும் நானோ டிஏபியின் விலையை உர நிறுவனங்களே நிா்ணயித்து வருகின்றன’ என தெரிவித்துள்ளாா்.