இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான் நிறுவனங்கள்!
ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.
ஜப்பான் பிரதமரின் இந்தியப் பயணத்தைத் தொடர்ந்து அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.
ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சி 3 நாள்கள் அரசுமுறை பயணமாக ஜூன் 1 - 3 வரை இந்தியா வந்துள்ளார். அவரைப் பிரதமர் மோடி தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார். இரு நாட்டுப் பிரதமர்களும் எதிர்கால முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தொடர்பான ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
உச்சிமாநாட்டுடன் இணைந்து நடைபெறும் இந்தியா - ஜப்பான் பொருளாதார கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் பங்குபெறுகின்றன. பிரதமர் டகாயிச்சியுடன் இந்தியா வந்திருந்த ஜப்பானின் தலைமை அமைச்சரவை துணைச் செயலாளர் மசானாவோ ஒசாகி இதனை உறுதிப்படுத்தினார். மேலும், ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.18 லட்சம் கோடி முதலீடு செய்யவிருப்பது பற்றிய பத்திரிகை செய்தியை தனது பதிவில் இணைத்திருந்தார்.
அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானின் இந்திய முதலீடு ரூ. 6 லட்சம் கோடியைத் தொடும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உறுதிப்பாட்டைத் தொடர்ந்து, தற்போது இந்த முதலீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் மூலம், இந்தியாவும் ஜப்பானும் இணைந்து எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த எரிசக்தி கையிருப்பு முயற்சிகளை அதிகரிக்கும் ஆய்வில் ஈடுபடும் என்றும்,பாதுகாப்புத் துறை சார்ந்த ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மேக் இன் இந்தியா திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக ஹரியானாவில் தொடங்கப்படும் மாருதி சுசூகியின் புதிய உற்பத்தி ஆலையை ஜப்பான் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவில் அமையவுள்ள மாருதி சுசூகியின் 4வது உற்பத்தி ஆலை. இந்த ஆலைகளின் மொத்த மதிப்பு ரூ.35,000 கோடி.
இந்தியப் பயணம் பற்றி டோக்கியோ செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் பிரதமர், ”இந்தப் பயணத்தின் மூலம், தற்போதைய சர்வதேச சூழலைக் கருத்தில் கொண்டு ஜப்பான்-இந்தியா இடையேயான மூலோபாயக் கூட்டாண்மையை ஆழப்படுத்தவும் இரு நாடுகளின் வணிக உறவை வலுப்படுத்தவும் பிரதமர் மோடியுடன் உறுதியான ஒத்துழைப்பை முன்னெடுப்போம் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
Japanese companies to invest Rs 1.18 lakh crore in India
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.