முகப்பு
இந்தியா

பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிப்பு.

Updated On : 19 மே, 2025 at 1:58 PM
ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்த ஷஷாத் - ANI
பகிர்:

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஷஷாத் என்பவரை உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் நேற்று (மே 18) கைது செய்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாகவும் பயங்கரவாத தடுப்பு அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இந்தத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், ஷஷாத் என்பவரை மொராதாபாத் அருகே கைது செய்தனர். இவர் ராம்பூர் மாவட்டத்தின் டன்டா என்ற பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு அவர் உளவு பார்த்தது தெரியவந்தது.

நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களையும் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் திரட்டினர். இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கமாக இந்தியாவில் உள்ள ஆடைகள், அலங்காரப் பொருள்கள், மிளகாய் உள்ளிட்டவற்றை இந்திய எல்லையில் இருந்து பாகிஸ்தானுக்குக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், பாகிஸ்தானில் வணிகம் செய்வதைப் போன்றே ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும், இந்தியாவில் உள்ள மற்ற உளவாளிகளுக்கு ஐஎஸ்ஐ உத்தரவின்பேரில் பணத்தையும் கொடுத்துள்ளார். அதோடு மட்டுமின்றி, உளவு பார்ப்பதற்காக இந்தியாவில் சிலரை பணம் கொடுத்து அழைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எல்லைத்தாண்டி பொருள்களைக் கொண்டுசெல்வது ஆபத்தானது என மிரட்டி, ஐஎஸ்ஐ அமைப்பினர் இதற்கு உதவுவதாகக்கூறி, உளவு பார்க்க சிலரை தயார்படுத்தியதும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்குத் தேவையான தகவல்களைப் பகிர்ந்ததாகவும் யூடியூபர் ஜோதி ராணி என்பவரை ஹரியாணா காவல் துறையினர் கைது செய்ததைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல: உச்ச நீதிமன்றம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments