மதரஸா கல்வியில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த பாடம்!
உத்தரகண்ட் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய பாடம் சேர்ப்பு...
உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்களை, மாநிலம் முழுவதுமுள்ள மதரஸா-க்களின் பாடத்திட்டங்களில் இணைக்கப்படுவதாக உத்தரகண்ட் மதரஸா வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை, வெளியிட்டுள்ள அம்மாநில மதரஸா கல்வி குழுவின் தலைவர் முஃப்தி ஷாமூன் காஸ்மி, மாணவர்கள் இடையே தேசப்பற்றை ஊக்குவிக்கும் விதமாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
உத்தரகண்டில் செயல்பட்டு வரும் சுமார் 451 மதரஸா-க்களில், 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, முஃப்தி ஷாமூன் காஸ்மி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சூஃபி அறிஞர்கள் மற்றும் கல்வியாளர் குழுவுடன் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில், பிரதமர் மோடியின் தலைமையிலான, ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய ராணுவத்தை அவர் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்கு பின்னர், தனது அறிவிப்பை வெளியிட்ட காஸ்மி, ராணுவப் படைகள் வெளிகாட்டிய வீரம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் மதரஸா மாணவர்களும் அதைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ”நாம் மதரஸா பாடத்திட்டங்களில் என்.சி.ஆர்.சி. பாடத்திட்டத்தை இணைத்துள்ளோம், அதன் மூலம் பிரதான கல்வியுடன் மாணவர்கள் இணைந்துள்ளனர். இந்த மாற்றம், கல்வி நிலையங்களில் உயர்தர கல்வியை வழங்கி வருகின்றது. மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய பாடங்களையும் இணைத்து அதன் மூலம் வருங்காலத் தலைமுறையினர் நம் நாட்டு ராணுவ வீரர்களின் துணிவு, வீரம், பலம் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.
மேலும், பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த ஒரு பாடத்தைச் சேர்ப்பதற்காக பாடத்திட்டக் குழுவின் கூட்டம் விரைவில் கூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்துடன், இந்தப் புதிய முயற்சியை வரவேற்ற உத்தரகண்ட் வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஷதாப் ஷாம்ஸ், உத்தரகண்ட் மாநிலம் வீரர்களின் நிலம் எனவும் அழைக்கப்படும் என்றும் நவீன மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் ஆபரேஷன் சிந்தூரைப் பற்றி இங்கு பயிலவில்லை என்றால் வேறு எங்கு கற்றுக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பங்குச் சந்தை வணிகம் சரிவு! முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.