ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்டது பற்றி..
ஹரியாணாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் உடல்கள் பூட்டப்பட்ட காரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் வசிப்பவர் பிரவீன் மிட்டல். இவர், தனது மனைவி, பெற்றோர், இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன் ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர் தாமில் உள்ள ஆன்மிக நிகழ்வுக்கு வந்துள்ளார்.
Advertisement
இதனிடையே, குடும்பத்துடன் காரை பூட்டிக்கொண்டு விஷம் குடித்துள்ளனர். காருக்குள் உயிருக்கு போராடுவதைக் கண்ட அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காரின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஹரியாணா காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில், காருக்குள் கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தில் கடன் பிரச்னை காரணமாக அழுத்தத்தில் இருந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தடயவியல் நிபுணர்கள் காரை சோதனை செய்தனர்.
7 பேரின் உடலும் உடற்கூராய்வுக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.