முகப்பு
இந்தியா

என்ன, ஜோதா பாய் - அக்பர் திருமணம் பொய்யா? ராஜஸ்தான் ஆளுநர் பரபரப்புப் பேச்சு!

இளவரசி ஜோதா பாய் - பேரரசர் அக்பர் திருமணமே பொய் என்று ராஜஸ்தான் ஆளுநர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Updated On : 30 மே, 2025 at 1:01 PM
திருமணம் - கோப்புப்படம் - Center-Center-Kochi
பகிர்:

முகலாயப் பேரரசர் அக்பருக்கும், ராஜ்புத் இளவரசி ஜோதா பாய்க்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமணம் சித்தரிக்கப்பட்டது என்றும், பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்களின் செல்வாக்கினால் ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவு பாகடே தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உதைப்பூரில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவு பாகடே, அக்பரின் சுயசரியைக அமைந்திருக்கும் அக்பர்நாமாவில், இந்தத் திருமணத்தைப் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தனது வாதத்துக்கு வலுசேர்த்துள்ளார்.

ஜோதா பாய் - அக்பர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது, இது பற்றி திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. வரலாற்றுப் புத்தகங்களிலும் இதையேதான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல பொய்... அங்கு பர்மல் என்றொரு மன்னர் இருந்தார், அவர்தான், அக்பருக்கு ஒரு பணிப்பெண்ணின் மகளைத் திருமணம் முடித்துவைத்தார் என்றும் பாகடே கூறுகிறார்.

பிறகு, மன்னர் பர்மால் மகளை 1562ஆம் ஆண்டு தற்போதைய ஜெய்ப்பூரில் அக்பர் திருமணம் செய்துகொண்டார். அவரது இயற்பெயர் தெரியவில்லை, வரலாறுகளிலும் இடம்பெறவில்லை. ஆனால், அவரது பெயர் ஹர்கா பாய் அல்லது ஹர்கான் சம்பாவதி என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க.. மடத்தின் தலைவரை சீருடையில் சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி! சமூக ஊடகங்களில் வைரல்!

ஆனால் பொய்யாக, முகலாயர்களுக்கும் ராஜபுத்திரர்களுக்கும் இடையிலான ஒரு அரசியல் பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த திருமணம் நடைபெற்றதாக பல வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர், இது சக்திவாய்ந்த இந்திய மன்னர்களின் விசுவாசத்தைப் பெற்றிருப்பதாகக் கூறி முகலாயப் பேரரசுகளை வலுப்படுத்த உதவியிருக்கிறது.

நமது கதாநாயகர்களின் வரலாற்றையே இந்த பிரிட்டிஷ்காரர்கள் மாற்றியிருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், ராஜபுத்திர அரசர் மகாராணா பிரதாப், அக்பருக்கு ஒரு ஒப்பந்தக் கடிதம் எழுதினார் என்ற வரலாற்றையும் அவர் மறுக்கிறார். அது முற்றிலும் தவறானது என்று கூறும் ஆளுநர், "மகாராணா பிரதாப் தனது சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வரலாற்றில், அக்பரைப் பற்றி மிகைப்படுத்தியும்,மகாராணா பிரதாப்பைப் பற்றி குறைத்தும் மதிப்பிடப்பட்டு, அதுவே வரலாறாகக் கற்பிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரலாற்றில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், திருமணத்திற்குப் பிறகு, ஜோதா பாய்க்கு மரியம்-உஸ்-ஜமானி என்ற பட்டம் வழங்கப்படுகிறது, அதன்படி 'யுகத்தின் மேரி' என்று அவர் அழைக்கப்படுகிறது. பின்னர் அவர் அக்பரின் வாரிசான ஜஹாங்கிரின் தாய் ஆனார். இதனால் முகலாய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக அவர் ஆனதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆனால், சில வரலாற்றாசிரியர்கள் 'ஜோதா பாய்' என்ற பெயரை, ஜோத்பூரைச் சேர்ந்த ஜஹாங்கிரின் ராஜபுத்திர மனைவியின் பெயருடன் குழப்பமடைந்திருக்கலாம் என்றும் ராஜஸ்தான் ஆளுநர் கூறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.