ம.பி.: ரயில்வே திட்டத்திற்காக வெட்டப்படும் 1.24 லட்சம் மரங்கள்!
மத்தியப் பிரதேசத்தில் புதிய ரயில்வே பாதைக்காக 1.24 லட்சம் மரங்கள் வெட்டப்படுவது குறித்து...
மத்தியப் பிரதேசத்தில், புதிய ரயில்வே பாதைக்காக சுமார் 1.24 லட்சம் மரங்கள் வெட்டப்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் இந்தூரில் இருந்து மும்பை உள்ளிட்ட மேற்கு நகரங்கள் மற்றும் தென்னிந்திய பகுதிகளுக்கு விரைவாகப் பயணம் செய்யும் வகையிலான புதிய ரயில்வே திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்தப் புதிய மோவ் - காண்ட்வா ரயில்வே பாதையானது, அடர்ந்த வனப்பகுதிகளின் வழியாகச் செல்வதால், அங்குள்ள சுமார் 1.24 லட்சம் மரங்கள் வெட்டப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால், இந்தூர் மற்றும் கார்கோன் மாவட்டங்களில் உள்ள சுமார் 1.41 லட்சம் மரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
Advertisement
இந்த நிலையில், புதிய ரயில்வே பாதைக்கு மரங்களை வெட்ட வனத்துறைக்கு மத்திய அரசு முதற்கட்ட அனுமதி வழங்கியுள்ளதாகவும், முறையான நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் முழு அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே பணிகளுக்காக இந்தூரின் 404 ஹெக்டேர் வனப்பகுதியும், கார்கோனின் 46 ஹெக்டேர் வனப்பகுதியும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கு, இணையாக தார் மற்றும் ஜாபுவா மாவட்டங்களில் ஹெக்டேருக்கு 1,000 புதிய மரங்கள் நடப்படும் என வனத் துறையினர் உறுதியளித்துள்ளனர்.
இந்த ரயில்வே பணிகள் அனைத்தும், வரும் 2027 - 28 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவதால் மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இடையிலான மோதல்கள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
இதையும் படிக்க: பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!