முகப்பு
இந்தியா

மக்களே உஷார்!! பஹல்காம் தாக்குதல் பெயரால் முதியவரிடம் ரூ.70 லட்சம் மோசடி!

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக முதியவரை மிரட்டி, இணைய வழியில் ரூ. 70 லட்சம் மோசடி

Updated On : 9 அக்டோபர், 2025 at 10:32 AM
பகிர்:

பஹல்காம் தாக்குதல் பெயரால் ஒரு முதியவரிடமிருந்து ரூ. 70 லட்சம் மோசடி செய்தவர்களை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.

மும்பையில் வசித்து வரும் 75 வயது முதியவர் ஒருவருக்கு, செப். 25-ல் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் வினிதா சர்மா என்ற பெண், தன்னை பயங்கரவாதத் தடுப்புக் குழு அதிகாரி என்று முதியவரிடம் அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையில் முதியவரின் பெயர் வெளிவந்ததாகவும், அவரின் மொபைல் எண் மற்றும் ஆதார் அட்டையும் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக வினிதா கூறியுள்ளார்.

தொடர்ந்து, முதியவரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட மற்றொருவர், போலீஸ் சீருடையில் இருந்த தன்னை பிரேம் குமார் என்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

முதியவரை கைது செய்யவிருப்பதாகவும், அவரின் வங்கிக் கணக்கு மற்றும் பாஸ்போர்ட்டை முடக்குவதாகவும் பிரேம் குமார் அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முதியவரின் வருமானம், வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புத்தொகை, பங்குகள் (Shares), அவரது மனைவியின் விவரங்கள் மட்டுமின்றி, அரசியல் குறித்த அவரது சித்தாந்தத்தையும் விசாரித்துள்ளனர்.

முதியவரின் பணத்தை, ரிசர்வ் வங்கியால் வெள்ளைப் பணம் என்று சான்றளிக்கப்பட வேண்டும் என்று, முதியவரிடமிருந்து ரூ. 70 லட்சத்தை 3 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யுமாறு கூறியுள்ளனர். அவர்களை நம்பிய முதியவரும் பணத்தை மாற்றியவுடன், போலியான ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் ஒன்றையும் வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியுள்ளனர்.

தொடர்ந்து, முதியவர் மற்றும் அவரது மனைவியின் மொபைல், கணினிகளையும் முடக்கியதாகக் கூறியதுடன், யாருடனும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர், அவர்கள்.

மேலும், மீண்டும் செப். 28-ல் ஒரு கோடி ரூபாயை மாற்றி விடுமாறு கூறியதால் சந்தேகமடைந்த முதியவர், காவல்நிலையம் சென்று புகார் அளித்தார்.

இதனையடுத்து, விசாரணையைத் தொடங்கிய மும்பை சைபர் குற்றப்பிரிவு காவல்துறை, மோசடி செய்தவர்களின் வாட்ஸ்ஆப் செய்திகள், ஆடியோ மற்றும் வங்கி விவரங்களையும் மீட்டுள்ளனர். மேலும் இவற்றினைக் கொண்டு, மோசடியாளர்களை கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதல் பெயரால் நடத்தப்பட்ட இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட முதியவர் தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்துள்ளார்.

summary

‘You funded Pahalgam attack terrorists’: Unbelievable ordeal of a 75 Y/O Mumbai man

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.