மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!
உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தை பிகார் அரசு அறிவித்துள்ளது.
பிகாரில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என பிகார் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, மாணவ விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கை விண்ணப்பதாரர்களுக்கு 1 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.4 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டன. இந்த கல்விக்கடனுக்கான வட்டி விகிதத்தை ரத்து செய்ய உள்ளதாக பிகார் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
Advertisement
Advertisement
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் பிகார் அரசு சிறப்பு திட்டத்தை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி கல்விக்கடன் பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வட்டியில்லா கல்விக்கடன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கடந்த 2016, அக்டோபர் 2 முதல் பிகாரில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டம் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.
முன்னதாக ரூ. 2 லட்சம் வரையிலான கடனை 60 மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். தற்போது அதிகபட்சமாக 84 மாதாந்திர தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ரூ. 2 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு, திருப்பிச் செலுத்தும் காலம் 84 மாதத் தவணைகளிலிருந்து அதிகபட்சமாக 120 மாதத் தவணைகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியும் என்பதை உறுதி செய்வதே தனது அரசின் நோக்கம். இந்த முடிவுகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிக்கும், அவர்கள் அதிக உற்சாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் உயர்கல்வியைத் தொடர உதவும். இதன் மூலம் அவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் கூறினார்.