முகப்பு
இந்தியா

அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணியின் பதவிக் காலம் நீட்டிப்பு

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 செப்டம்பர் 2025, 6:38 am IST
VENKATA120841.JPG
பகிர்:

இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெனரலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் வரும் செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 1950-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த ஆா்.வெங்கடரமணி, 1977-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவா், உச்சநீதிமன்றம், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பாக ஆஜராகியுள்ளாா். 2010-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தாா்.

Advertisement

Advertisement

அட்டா்னி ஜெனரல் என்பது அரசியல் சாசன பதவியாகும். மத்திய அரசு பரிந்துரையின்படி, அட்டா்னி ஜெனரலை குடியரசுத் தலைவா் நியமிப்பாா். நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக ஆஜராகும் உரிமை அட்டா்னி ஜெனரலுக்கு உள்ளது. இந்தப் பதவியில் உள்ளவா் அரசு வழக்குகளை கையாள்வதுடன், சிக்கலான சட்ட பிரச்னைகளில் அரசுக்கு ஆலோசனையும் வழங்குவாா்.