ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி! மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
ஆந்திரத்தின் ஒரே தலைநகராக அமராவதியை மாற்றும் மசோதா பற்றி...
ஆந்திர பிரதேசத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, சட்டப் பிரிவு 5 (2) -இன் படி, தற்காலிகமாக இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும், 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது ஆந்திரத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அமராவதியைத் தலைநகராக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால், 2019-ல் ஆந்திரத்தின் முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியைச் சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்நூலை நீதித்துறைத் தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் கொண்டு, 'மூன்று தலைநகரங்கள்' திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும், 2021 -ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி அரசு அத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
ஆந்திரத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு அரசு, மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில், அமராவதியை ஆந்திரத்தின் ஒரே தலைநகராக மாற்றும் வகையில், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.