தில்லியில் சிலிண்டர் கடத்தல்: 3 பேர் கைது! 45 சிலிண்டர்கள் பறிமுதல்!
தில்லியில் சட்டவிரோதமாக சிலிண்டர் விநியோகித்த கும்பல் சிக்கியதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 45 சிலிண்டர்கள் பறிமுதல் செய்தது தொடர்பாக...
தில்லியின் பாலம் பகுதியில் சட்டவிரோதமாக சிலிண்டர் விநியோகித்த கும்பல் சிக்கியதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 45 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பாலம் என்ற குடியிருப்புப் பகுதியில், எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், குழாய்கள் மற்றும் எடை இயந்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிலிண்டரிலிருந்து மற்றொரு சிலிண்டருக்கு எரிவாயு சட்டவிரோதமாக மாற்றப்பட்டு அதனை விநியோகம் செய்து வருவதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்தனர். விசாரித்ததில் இக்குற்ற சம்பவத்துக்கு காரணமாக இருந்தவர்கள் அனார் சிங், சத்யாவீர் மற்றும் விகாஸ் குமாரி என தெரிய வந்தது.
உடனடியாக அவர்களைக் கைது செய்ததோடு, 45 வீட்டு உபயோக சிலிண்டர்கள், 3 எரிவாயு பரிமாற்ற குழாய்கள் மற்றும் 1 டெம்போ வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், சிலிண்டர்களைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது மீண்டும் நிரப்புவதற்கோ உரிய எந்தவொரு உரிமமோ அல்லது அங்கீகாரமோ குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்காசிய போர் காரணமாக இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழலில் இதுமாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.