இந்தியாவின் தரவுகளை டிரம்ப்பிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி
இந்தியாவின் தரவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒப்படைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்தது குறித்து...
இந்தியாவின் தரவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒப்படைத்ததாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்துக்கான பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் உள்பட தேர்தல் நடக்கவிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் தலைவர்கள் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அஸ்ஸாம் மாநிலம், கர்பி ஆங்லாங்கில் பேசியபோது, “இன்று, இந்தியா ரஷ்யா, ஈரான் அல்லது ஈராக் போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்க விரும்பினால், அதற்கு டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுகிறது.
அவர்களின் அனுமதி இல்லாமல் நம்மால் வாங்க முடியாது. நரேந்திர மோடி இந்தியாவின் தரவுகளை டொனால்ட் டிரம்ப்பிடம் ஒப்படைத்துள்ளார். டிரம்ப் அதைத் தன் விருப்பப்படி பயன்படுத்தலாம் அல்லது சேமித்து வைக்கலாம்.
மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் ரூ. 9 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்களை இந்தியா வாங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது நமது சிறு வணிகங்களுக்குத் தீங்கு விளைவிக்கும்.
அமெரிக்காவுக்கு இந்தியா நிறைய கொடுத்துள்ளது. ஆனால், பதிலுக்கு எதுவும் பெறவில்லை. நமது வரிகள் அதிகரித்துள்ளன. நமது தரவுகள் பகிரப்பட்டுள்ளன. மேலும், நமது எண்ணெய் வளத் தேர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கேள்வி என்னவென்றால், இந்த ஒப்பந்தம் ஏன் செய்யப்பட்டது? டொனால்ட் டிரம்ப், நரேந்திர மோடியைக் கட்டுப்படுத்துவதால்தான் இது செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.