முகப்பு
இந்தியா

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

மத்தியப் பிரதேசத்தில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி 16 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 5:19 pm IST
சம்பவ இடத்தில் மீட்புப் பணி. - ANI
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணி 16 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜலாரியா கிராமத்தில் ஆடு மேய்ப்பவர் தேவாசி. அவரது 3 வயது மகன் பகீரத். வியாழக்கிழமை இரவு வெளியே விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் அருகிலுள்ள 70அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளான்.

சிறுவனைப் பாதுகாப்பாக வெளியே கொண்டுவர, மீட்புக் குழுக்கள் கடந்த 16 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இரவு 8 மணியளவில் சிறுவன் ஆழ்துளைக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

Advertisement

அருகில் வேலை செய்து கொண்டிருந்த சிறுவனின் தாய், மகன் விழுவதைக் கண்டு சப்தமிட்டு அலறினார். அருகிலிருந்த மக்கள் உதவிக்கு விரைந்து வந்து, போலீஸார் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் ரோஷன் குமார் சிங் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

போக்லைன் மற்றும் ஜேசிபி உள்ளிட்ட பல இயந்திரங்களைப் பயன்படுத்தி பெரிய அளவிலான மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. குழந்தையை அடைவதற்காக, மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் இணைப் பள்ளம் தோண்டி வருகின்றனர். குழந்தை சுவாசிக்க உதவும் வகையில் குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

இதுவரை, சுமார் 35 அடி நீளத்திற்கு இணையாகத் தோண்டும் பணி நிறைவடைந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் பிரதீப் சர்மா கூறுகையில், ஆழ்துளைக் கிணறு ஒரு கல்லால் மூடப்பட்டிருந்ததாகவும், அதை ஒரு ஆடு தற்செயலாகத் தட்டிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். குழந்தை மூடியைத் திறந்து பார்த்தபோது உள்ளே விழுந்தது என்றார்.

பகீரத், மூன்று மகன்களில் இளையவன். அவனது தந்தை தற்போது ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் இருக்கிறார். மேலும் சிறுவனின் இரண்டு மூத்த சகோதரர்களும் அங்கு படித்து வருகின்றனர். அவன் தனது தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆடுகளை மேய்ப்பதற்காக மால்வா பகுதிக்கு வந்திருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

summary

A three-year-old boy fell into a borewell while playing in Jhalaria village of Badnagar tehsil, around 60 km from Ujjain, on Thursday night.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.