வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாதுகாப்புக் குறைவு: அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!
பாதுகாப்புக் குறைவு பற்றி அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர்...
அஸ்ஸாமில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சேகரித்து வைத்துள்ள மூன்று தொகுதிகளில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளதாக அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா குற்றம் சாட்டினார்.
126 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 5ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் பாதுகாப்புக் குறைவு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தேர்தல் பார்வையாளர் நரசிம்மகுரி ரெட்டிக்கு அவர் எழுதிய கடிதத்தில்,
Advertisement
டெமோ, சிவசாகர் மற்றும் நசிரா ஆகிய மூன்று தொகுதிகளில் பாதுகாப்பு குறைவு ஏற்பட்டுள்ளது. சிவசாகர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள 12 மற்றும் 15-ஆம் எண் அறைகளில் பாதுகாப்பு மீறல்கள் ஏற்பட்டுள்ளது.
அறைகளின் இரண்டு கதவுகளில் ஒன்று ஒரு பக்கத்தில் முத்திரையிடப்பட்டிருப்பதையும், மற்றொரு கதவு உள்ளிருந்து வெறும் சாத்தப்பட்டிருக்கின்றது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அணுகுவதைத் தடுப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் கடுமையான வழிகாட்டுதல்கள் கடைப்பிடித்துவரும் நிலையில், இந்த விஷயம் கவலைக்குரிய வகையில் முரணாக அமைந்துள்ளது. இரட்டைப் பூட்டு முறையை அமல்படுத்தத் தவறியது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை மீறுவதாகும் எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.
ஆவணப்படுத்தப்பட்ட இந்தக் குறைபாடுகளைக் கவனத்தில் கொண்டு, தேர்தல் செயல்முறையின் புனிதம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் தேர்தல் கண்காணிப்பாளரை வலியுறுத்தினார்.