முகப்பு
இந்தியா

மறுவரையறை மசோதா! விவாதம் செய்யத் தயாரா? - ஆந்திர துணை முதல்வருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால் விடுத்துள்ளது குறித்து...

Updated On : 18 ஏப்ரல், 2026 at 4:48 PM
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் - நடிகர் பிரகாஷ் ராஜ் - கோப்புப் படம் | ENS
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 4:14 PM

தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்துக்கு நீங்கள் தயாரா என ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு போதுமான வாக்குகள் கிடைக்காததால் மக்களவையில் வெள்ளிக்கிழமை (ஏப். 18) அன்று தோல்வியடைந்தன.

இந்த மசோதாக்களால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் எனவும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனவும் கூறி காங்கிரஸ், திமுக, சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

Advertisement

இதனைத் தொடர்ந்து, மகளிரின் பிரதிநிதித்துவத்தை இந்திய சட்டப்பேரவைகளில் வலுப்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் முடக்கியதாகக் கூறி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், பவன் கல்யாணின் பதிவுக்குப் பதிலளித்த நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ், மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள் எனவும், ஆந்திர மக்களின் மாநில உரிமைகளை விற்காதீர்கள் எனவும் கூறியுள்ளார்.

இதுபற்றி, சனிக்கிழமை அன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

”பிரதமர் நரேந்திர மோடியை திருப்திப்படுத்த மக்களிடம் பொய் சொல்வதை நிறுத்துங்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2023 ஆம் ஆண்டே ஒப்புதல் பெற்றுவிட்டது. அதை இப்போதும் கூட நிறைவேற்ற முடியும். ஆனால், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற உங்கள் கூட்டம் எதிர்பார்க்கிறது.

உங்களின் சுயமரியாதையையும், உங்களை துணை முதல்வராக்கிய ஆந்திர மக்களின் மாநில உரிமைகளையும் விற்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதுகுறித்து, உங்களுக்கு விளக்கமளிப்பதற்காக விவாதம் செய்ய நான் தயார். நீங்கள் தயாரா” எனத் தெரிவித்துள்ளார்.

summary

Actor Prakash Raj has challenged Andhra Pradesh DCM Pawan Kalyan, asking if he is ready for a debate regarding the delimitation bill.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.