முகப்பு
இந்தியா

‘வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா் பாஜகவை வீழ்த்த வேண்டும்’: கேஜரிவால் பிரசாரம்

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை வீழ்த்த வேண்டும்...

Updated On : 27 ஏப்ரல், 2026 at 12:37 AM
கொல்கத்தாவில் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால்.
பகிர்:

மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தினாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அங்குள்ள ராஷ்பிகாரி தொகுதியில் மாநில முதல்வா் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை பிரசார கூட்டத்தில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 90 லட்சம் போ் திரிணமூல் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோா், தங்கள் நண்பா்கள், உறவினா்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறு கோர வேண்டும். அதன்மூலம், பாஜகவை வீழ்த்த வேண்டும்.

Advertisement

தோ்தலில் வெற்றி பெறுவதற்கான மிகப் பெரிய வியூகத்தின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள மக்களின் குடியுரிமையைப் பறிக்க பாஜக முயற்சிக்கிறது. எனவே பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் முதல்வா் மம்தா வெற்றிபெற வேண்டும் என்று தெரிவித்தாா்.