வங்கியில் பணம் எடுக்க எலும்புக் கூடுடன் சென்ற பழங்குடி நபரால் பரபரப்பு
ஒடிசாவில் வங்கியில் எலும்புக் கூடுடன் பணமெடுக்கச் சென்ற நபரால் பரபரப்பு
ஒடிசாவில் வங்கியில் எலும்புக் கூடுடன் பழங்குடி நபர் பணமெடுக்கச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தின் மல்லிபாஷியில் ஜீது முந்தா (42) என்பவர், மறைந்த சகோதரியான கலா முந்தாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக ஒடிசா கிராமிய வங்கிக்குச் சென்றுள்ளார்.
ஆனால், தனது சகோதரி இறந்ததை வங்கியில் ஜீது கூறாத நிலையில், கணக்கு வைத்திருப்பவரை நேரில் அழைத்து வந்தால் மட்டுமே பணம் தரப்படும் என வங்கி அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். தொடர்ந்து, மூன்று முறை ஜீதுவுக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
Advertisement
இதனையடுத்து, தங்களின் வீட்டருகே புதைக்கப்பட்டிருந்த கலாவின் உடலைத் தோண்டியெடுத்து, எலும்புக் கூட்டுடன் வங்கியில் பணத்தை எடுக்க ஜீது சென்றுள்ளார்.
எலும்புக் கூட்டுடன் ஜீது வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கலாவின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஜீதுவுக்கு தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக வங்கி நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து, ஜீது மீண்டும் எலும்புக் கூட்டை எடுத்துச் சென்றார்.
மேலும், தோண்டியெடுக்கப்பட்ட அதே இடத்திலேயே மீண்டும் எலும்புக் கூட்டை ஜீது புதைத்தார்.