உங்கள் வங்கிக்கணக்கைப் பயன்படுத்த பணம் தருகிறார்களா? ஆர்பிஐ எச்சரிக்கை!
வங்கிக்கணக்கு பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...
உங்களுடைய வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதற்காக உங்களுக்கு பணம் தருவதாகக் கூறினால் அதனை அனுமதிக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்டர்நெட் பேங்கிங், மொபைல் செயலிகள் மூலமாக ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதற்கு ஏற்ப டிஜிட்டல் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக அரசு மற்றும் வங்கிகள், நிதி சார்ந்த நிறுவனங்கள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய எச்சரிக்கை செய்தியை வாட்ஸ்ஆப் வழியாக அனுப்பியுள்ளது.
Advertisement
Advertisement
"உங்கள் வங்கிக் கணக்கை பயன்படுத்துவதற்காக யாராவது உங்களுக்கு சுலபமாக பணம் தருவதாகச் சொல்கிறார்களா?
சட்ட விரோதமாக பணத்தை பரிமாற்றுபவர்களாக (money mule) இருக்காதீர்கள்!
பணம் பரிமாற்றுபவர் (money mule) சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை ஒருவர் சார்பாக மற்றவர்களுக்குப் பரிமாற்றம் செய்பவர் ஆவார்.
உங்கள் வங்கிக் கணக்கு = உங்கள் பணம்
பணம் பரிமாற்றம் செய்வதற்காக உங்கள் வங்கிக் கணக்கை வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
உங்கள் வங்கிக் கணக்கில் மற்றவர்கள் பணத்தைப் பெறவோ அல்லது அனுப்பவோ அனுமதிப்பது உங்களைச் சிறைக்கு அனுப்பக்கூடும்.
உங்கள் வங்கி விவரங்கள், ஓடிபி(OTP) அல்லது கடவுச்சொற்களை எப்போதும் யாருடனும் பகிராதீர்கள்.
உங்கள் கணக்கைப் பாதுகாத்திடுங்கள். உங்களைப் பாதுகாத்திடுங்கள்
சுலபமாக பணம் சம்பாதிப்பது ஆபத்தில் முடியலாம்
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html
ஆர்பிஐ சொல்கிறது - விவரமா இருங்க, எச்சரிக்கையா இருங்க!" என்று எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.
இதன்படி, வங்கிக்கணக்கு வைத்திருப்போர் தங்கள் விவரங்களை யாரிடமும் பகிரவும் வேண்டாம், குறிப்பாக பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற விவரங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்களுடைய வங்கிக்கணக்கை யாரும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டிஜிட்டல், ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க ஆர்பிஐ தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.