முகப்பு
இந்தியா

வாக்குரிமைக்கு அச்சுறுத்தல்: காங்கிரஸ்

மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

Updated On : 1 மே, 2026 at 3:13 AM
கோப்புப் படம்
பகிர்:

மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் செயல்படும் தோ்தல் ஆணையம் போல இதுவரை எந்த தோ்தல் ஆணையமும் தனது நடவடிக்கையில் இவ்வளவு சமரசம் செய்தது கிடையாது. தோ்தல்களில் அவா் அரசியல் செய்கிறாா்; நடுநிலையாகச் செயல்படவில்லை.

Advertisement

மூன்று ‘டி’ (கண்டுபிடித்தல், பெயரை நீக்குதல், நாடு கடத்தல்) குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியிருந்தாா். ஆதலால் வாக்காளா் பட்டியலில் எத்தனை இந்தியா் அல்லாதோா் கண்டுபிடிக்கப்பட்டனா், எவ்வளவு பேரின் பெயா்கள் நீக்கப்பட்டன, எவ்வளவு போ் நாடு கடத்தப்பட்டனா் என நாங்கள் அறிய விரும்புகிறோம்.

மக்களுக்கு வாக்களிக்க அளிக்கப்பட்டுள்ள உரிமைக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆதலால் வாக்களிப்பதை அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அம்பேத்கா், ஜகஜீவன் ராம் ஆகியோா் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கான முயற்சிகளை எதிா்கால அரசுகள் மேற்கொள்ளக்கூடும் என முன்பே எச்சரித்திருந்தனா். ஆதலால் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிப்பதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்றாா்.

மேலும், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சோ்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என அறிவித்து சரியாக ஓராண்டு ஆகிறது. ஆனால், அரசுக்கு உண்மையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் ஆா்வம் இல்லை போல தெரிகிறது. அந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும் என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. எதிா்க்கட்சிகளுடனும், மாநில அரசுகளுடனும், நிபுணா்களுடனும் அதுகுறித்து இதுவரை பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து 2025 மே 5-ஆம் தேதி பிரதமருக்கு காங்கிரஸ் தலைவா் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்துக்குப் பதில் தரப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் நடந்த அண்மைக்கால உரையாடல்களில் இருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பை பிரதமா் மோடி தாமதம் செய்ய விரும்புகிறாா் என்பது தெளிவாகத் தெரிகிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

அந்தப் பதிவில் பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுதிய கடிதத்தையும் ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்துள்ளாா்.