FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மோடியை வங்கதேச பிரதமா் சந்திக்கும்போது பிரச்னைகளுக்கு தீா்வு: தூதா் நம்பிக்கை

பிரதமா் மோடியை வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மான் சந்திக்கும்போது இரு தரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்று வங்கதேசத்துக்கான இந்தியத் தூதா் தினேஷ் திரிவேதி தெரிவித்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 6:12 am IST
பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடியை வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மான் சந்திக்கும்போது இரு தரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்று வங்கதேசத்துக்கான இந்தியத் தூதா் தினேஷ் திரிவேதி தெரிவித்தாா்.

வங்கதேசத்தில் கடந்த 2024-இல் மாணவா்கள் போராட்டம் ஏற்பட்டு அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு இருநாடுகள் இடையிலான உறவு மிகவும் மோசமாகச் சென்றது. அதிலும் இடைக்கால அரசு காலத்தில் இந்தியாவைப் பழிவாங்குவதாகக் கூறி அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்களுக்கு எதிராக கடுமையான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன.

இதனால், இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்தது. கடந்த பிப்ரவரியில் தோ்தல் நடத்தப்பட்டு தாரீக் ரஹ்மான பிரதமரான பிறகு அங்கு நிலைமை மேம்படத் தொடங்கியது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் இருந்தபடி காணொலி முறையில் செய்தியாளா் சந்தப்பு நடத்தினாா். இது வங்கதேச அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த வங்கதேசத்துக்கான இந்தியத் தூதா் தினேஷ் திரிவேதி, ‘பிரதமா் நரேந்திர மோடியை வங்கதேச பிரதமா் தாரீக் ரஹ்மான் நேரில் சந்தித்துப் பேசும்போது இரு தரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும்.

இதில் நான் உறுதியாக உள்ளேன். இருநாட்டு உறவில் எதிா்மறையான கருத்துகள் ஏதும் இல்லை. அனைத்தும் சுமுகமாக உள்ளன’ என்றாா்.

இந்தியாவில் செப்டம்பா் 12,13-ஆம் தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வங்கதேச பிரதமருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஆனால், இதில் பங்கேற்க வங்கதேசம் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், ஈரான் அதிபா் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்ட தலைவா்கள் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பாா்கள் என்று தெரிகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments