கார்கே அவமதிப்பு நம் அனைவரின் மீதான அவமதிப்பே! சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! சி.பி. ராதாகிருஷ்ணன்
காங்கிரஸ் தலைவர் கார்கே உரையாற்றிய இடத்தை யாகம் நடத்தி சுத்தம் செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு தெரிவித்தது குறித்து...
உத்தரகாண்டின் ஹல்த்வானியின் ராம்லீலா திடலில், ஆக. 8-ல் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பேரணியில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று உரையாற்றினார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பேரணி முடிந்தபிறகு, தான் உரையாற்றிய இடத்தை ஸ்ரீராம் சேனை அமைப்பினர் சுத்தம் செய்ததுடன், அந்த இடத்தில் யாகமும் நடத்தினர். இந்த அமைப்புடன் பாஜகவுக்கு தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு மாநிலங்களவையில் பேசிய கார்கே, தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மாநிலங்களவையில் கார்கே பேசியதாவது, "ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் நான் உரையாற்றினேன். அந்தக் கூட்டத்தில் எந்தவொரு சமூகம் குறித்தோ மதம் குறித்தோ நான் பேசவில்லை. அரசின் கொள்கைகள் குறித்து மட்டுமே நான் வலியுறுத்திப் பேசினேன்.
ஆனால், கூட்டம் முடிந்த பிறகு, அந்த இடத்தைப் புனிதப்படுத்தும் நோக்கில் பாஜகவினர் ஒரு யாகம் நடத்தினர். ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடக்குமா? அரசியலமைப்பை நீங்கள் எப்படி பாதுகாக்க முடியும்? இது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்.
இதனை ஓர் அரசியல் பிரச்னையாக மாற்ற நான் விரும்பவில்லை. நான் பல ஆண்டுகளாக இந்த அவையில் இருந்து வருகிறேன். நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன். எனக்கு உதவுங்கள் என்றோ, எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றோ நான் ஒருபோதும் யாரிடமும் கோரியதில்லை.
போராடுவதற்கான வலிமை என்னிடம் உள்ளது. நான் போராடுகிறேன். ஆனால், நீங்கள் என்னைத் தீண்டத்தகாதவரைப்போல நடத்துகிறீர்கள். நான் பேசிய இடத்தில் யாகம் நடத்துகிறீர்கள்; என்னை அவமானப்படுத்துகிறீர்கள்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் பாஜகவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக கார்கேவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான ஜெ.பி. நட்டா மறுப்பு தெரிவித்தார்.
மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பேசியதாவது, "கார்கே கூறியது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே மிகவும் வருத்தமளிக்கிறது.
இதுபோன்ற செயல்களை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. இதுகுறித்து நாங்கள் விசாரிப்போம். கார்கே குறிப்பிட்ட இடத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படும். இதனை நான் கண்டிக்கிறேன்.
பாஜக தேசிய தலைவர் இதனை விசாரிப்பார். உங்கள் உணர்வுகள் புன்படுத்தப்பட்டது நம் அனைவருக்கும் வருத்தமளிக்கக் கூடியதாய் இருக்கிறது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசியதாவது, "கார்கே அவமதிக்கப்படுவது என்பது நாம் அனைவரும் அவதிக்கப்படுவதாகும். இந்தச் சம்பவம் அரசியல் வேறுபாடின்றி கண்டிக்கப்பட வேண்டும்.
இதற்குப் பொறுப்பானவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்தச் செயலுக்கு பின்னால் இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
Congress Chief Kharge alleges 'Shuddhikaran' by BJP after Haldwani rally; Nadda condemns incident, assures probe
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.