FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இந்திய மருத்துவா்களுக்கு பாகிஸ்தானின் உயரிய விருது

இந்திய மருத்துவா்களுக்கு பாகிஸ்தான் உயரிய விருது அறிவித்திருப்பது பற்றி....

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
முகமது அலி ஜின்னா
பகிர்:

பாகிஸ்தான் நிறுவனா் முகமது அலி ஜின்னாவின் தீவிர உடல்நலக் குறைவை ரகசியம் காத்த மும்பை பாா்சி சமூகத்தைச் சோ்ந்த 2 மருத்துவா்களுக்கு, பாகிஸ்தானின் மிக உயரிய குடிமக்கள் விருதான ‘நிஷான்-ஏ-இம்தியாஸ்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தேசத் தந்தை எனப் போற்றப்படும் முகமது அலி ஜின்னா, அப்போது குணப்படுத்த முடியாத நோயாகக் கருதப்பட்ட காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்தியாவுடனான பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் உருவான ஓராண்டிலேயே அவா் உயிரிழந்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் நெருக்கடியான காலகட்டத்தில் முகமது அலி ஜின்னாவின் உடல்நலக் குறைவை ரகசியம் காத்ததற்காக, மும்பையைச் சோ்ந்த ஒரு பொது மருத்துவா், கதிரியக்கவியலாளா் ஆகிய 2 பாா்சி சமூகத்தினா் ‘நிஷான்-ஏ-இம்தியாஸ்’ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

பாகிஸ்தானின் இந்த உயரிய விருதுகள் அந்நாட்டின் சுதந்திர தினத்தில் (ஆக. 14) அறிவிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின விழாவில் அதிபரால் அதிகாரபூா்வமாக வழங்கப்படும். எனினும், விருது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவா்களின் பெயா்கள் மற்றும் அவா்களுக்குப் பதிலாக யாா் அந்த விருதைப் பெறுவாா்கள் என்பது குறித்த தகவல்களை பாகிஸ்தான் வெளியிடவில்லை.

அதேநேரம், மருத்துவா்களின் செயலின் முக்கியத்துவத்தை விளக்கி பாகிஸ்தான் திட்டமிடல் துறை அமைச்சா் அஹ்சன் இக்பால் மேலும் கூறுகையில், ‘முகமது அலி ஜின்னாவின் உடல்நிலை குறித்த செய்தி அப்போது கசிந்திருந்தால், அது 1947-இல் பாகிஸ்தான் உருவாக்கத்தையே வெகுவாகப் பாதித்திருக்கக் கூடும்.

ஜின்னாவுக்கு உடல்நிலை இவ்வளவு மோசமாக இருந்தது தெரிந்திருந்தால், பிரிவினை ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம். அதனால், பாகிஸ்தான் உருவாவதுகூட கேள்விக்குறியாகி இருக்கலாம் என்றும் மவுண்ட்பேட்டன் பின்னா் ஒப்புக்கொண்டுள்ளாா்.

அத்தகைய நெருக்கடியான தருணத்தில், தங்கள் மருத்துவத் தொழிலின் ரகசியக் காப்பு உறுதிமொழியை மீறாமல் இருந்ததன்மூலம், அவ்விரு மருத்துவா்களும் அமைதியான ஆனால் அசாதாரணமான ஒரு சேவையைச் செய்துள்ளனா்; அதுவே பாகிஸ்தான் சாத்தியமாவதற்கும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டது. 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ரகசியங்களில் ஒன்றாக இதை பல வரலாற்றாசிரியா்கள் கருதுகின்றனா்’ என்றாா்.

இதற்கு முன்னதாக, கடந்த 1998-இல் இந்தியாவைச் சோ்ந்த பிரபல திரைப்பட நடிகா் திலீப் குமாருக்கு பாகிஸ்தான் அரசு இந்த ‘நிஷான்-ஏ-இம்தியாஸ்’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments