விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு: தெலங்கானா, ஆந்திராவில் அமலாக்கத்துறை சோதனை
ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, தெலங்கானா, ஆந்திரத்தில் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை குறித்து...
புது தில்லி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கொலை வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, தெலங்கானா மற்றும் ஆந்திரம் மாநிலங்களில் ஆறு இடங்களில் அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஹைதராபாத் மற்றும் கடப்பாவில் உள்ள ஆறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் தொடங்கிய இந்தச் சோதனை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கடப்பா நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஒய்.எஸ். அவினாஷ் ரெட்டியின் வீடு மற்றும் அவரது தந்தை ஒய்.எஸ். பாஸ்கர் ரெட்டிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தக் கொலை தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது.
கொலை வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பண பரிவர்த்தனைகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்த விரிவான விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளன. இந்த வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகள் மற்றும் பணப் புழக்கத்தின் ஆதாரங்களை அந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் இளைய சகோதரரும், முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விவேகானந்த ரெட்டி, மார்ச் 2019-ல் ஆந்திரம் மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் உள்ள தனது இல்லத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வந்த நிலையில் அவரது கொலை அந்த மாநிலத்தில் பெரும் அரசியல் மற்றும் சட்டரீதியான சர்ச்சையையும், பல சந்தேகங்களை கிளப்பியது.
இதனிடையே, விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
ஆரம்பத்தில் மாநிலக் காவல்துறையால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த கொலை வழக்கு விசாரணை 2020 இல் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தக் கொலை பல நபர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்று குற்றம் சாட்டியது. கொலை வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், அதற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், 2023 ஏப்ரல் 16-ஆம் தேதி பாஸ்கர் ரெட்டியும், ஜூன் மாதம் அவினாஷ் ரெட்டியையும் சிபிஐ கைது செய்தது. இருப்பினும், தெலங்கானா உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
ED raids YSRCP MP Avinash Reddy’s premises in Vivekananda Reddy murder-linked case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.