அனைவருக்குமான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு: இந்திய - ஜப்பான் கூட்டறிக்கை
சுதந்திரமான, அனைவருக்குமான இந்திய - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் வகையில், இருதரப்பு கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஜப்பான் இடையே ஒப்பந்தம்
சுதந்திரமான, அனைவருக்குமான இந்திய - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் வகையில், இருதரப்பு கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியா - ஜப்பான் இடையே ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
மேலும், இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் பயணத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்குத் தடையாக அமையும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கும், கட்டாயத்தின் மூலம் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சிகளுக்கும் இந்தியா - ஜப்பான் தரப்பில் கூட்டாக எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தெற்கு மற்றும் கிழக்கு சீன கடல் பகுதிகளில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவும் ஜப்பானும் இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை வந்த ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஷின்ஜிரோ கொய்ஸுமியுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தில்லியில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, இரு நாடுகள் தரப்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
சுதந்திரமான, அனைவருக்குமான இந்திய - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் வகையில், இருதரப்பு கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தப் பேச்சுவாா்த்தையில் உறுதியேற்கப்பட்டது. அதற்கான, கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் இரு பாதுகாப்பு அமைச்சா்கள் சாா்பில் கையொப்பமிடப்பட்டது.
கடற்படை கப்பல்கள் பரஸ்பர வருகை, கூட்டுப் பயிற்சி, பணியாளா்கள் மற்றும் துறைசாா் நிபுணா்களின் பரிமாற்றம், இருதரப்பு துறைமுகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பராமரிப்பு மற்றும் பழுதுபாா்ப்பு வசதிகள் உள்ளிட்ட தளவாட ஆதரவு ஆகியவற்றின் மூலம் கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உறுதியேற்கப்பட்டது.
இந்த ஒத்துழைப்பு என்பது, ஜப்பான் - இந்தியா இரு நாடுகளுக்கு மட்டுமானதல்ல, இந்தப் பிராந்தியம் மற்றும் சா்வதேச சமூகத்துக்குமானது. உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்துள்ள சூழலில், பிராந்திய மற்றும் சா்வதேச பாதுகாப்புச் சூழல் குறித்த மதிப்பீடுகளை இரு நாடுகளும் பகிா்ந்துகொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், கப்பல் போக்குவரத்து மற்றும் வான்வழிப் பயணத்தின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்குத் தடையாக அமையும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கும், கட்டாயத்தின் மூலம் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சிகளுக்கு இருதரப்பிலும் வலுவான எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.