இட ஒதுக்கீட்டை யாராலும் ரத்து செய்ய முடியாது: சிராக் பாஸ்வான்
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு உரிமை என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அரசியலமைப்பு உரிமை என்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்று லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்திருந்தது. மேலும், இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் தடுக்க மத்திய அரசு நிறுவன பணிகளில் ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், ”யாரோ ஒருவர் சொல்வதற்காக இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா? இட ஒதுக்கீடு சலுகையோ பிச்சையோ கிடையாது. அது ஒரு அரசியலமைப்பு உரிமை.
Advertisement
Advertisement
இட ஒதுகீட்டை ஒழிப்பது பற்றிப் பேசுவது ஒருபுறம் இருந்தாலும், அதில் மறுபரிசீலனை அல்லது மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்கிற சிந்தனையே இன்றைய சூழலில் இட ஒதுக்கீட்டின் அவசியம் பற்றிய புரிதல் இல்லாதவர்களின் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
இன்றைக காலத்திலும் சாதியப் பாகுபாடு முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. தலித் மணமக்கள் குதிரையில் செல்வதைத் தடுப்பது, தலித் இளைஞர்களின் திருமண ஊர்வலங்களைத் தடுத்து நிறுத்துவது மற்றும் தலித் அரசியல் தலைவர்கள் வந்து சென்ற பின்னர் கோவில் வளாகத்தை கங்கை நீரால் சுத்தம் செய்வது போன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்து வருகின்றன.
இந்தச் சம்பவங்கள் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை மனநிலை இன்னும் சமூகத்தில் நிலவுவதையே காட்டுகின்றன. இத்தகைய சூழலில் இட ஒதுக்கீட்டின் தேவையை எப்படி மறுக்க முடியும்?
நான் இருக்கும் வரையில், ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் மகன் சிராக் பஸ்வான் அரசின் ஒரு பகுதியாக இருக்கும் வரையில், இட ஒதுக்கீட்டை வலுவிழக்கச் செய்யும் அல்லது முடிவுக்குக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் யாராலும் செயல்படுத்த முடியாது என்பதை நான் முழு நம்பிக்கையுடன் உறுதியாகக் கூறுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Chirag Paswan has stated that caste-based reservation cannot be abolished, as it is a constitutional right.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.