FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மாணவா்கள் தீவிரப் போராட்டம் எதிரொலி: ஜாா்க்கண்டில் ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ரத்து

ஜாா்க்கண்டில் அரசு தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வை ரத்து செய்ய மாநில அரசு முடிவு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
மாணவா்கள் தீவிரப் போராட்டம் எதிரொலி - PTI
பகிர்:

ஜாா்க்கண்டில் அரசு தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவா்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, 3 வாரங்களுக்கும் மேலாக மாணவா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து ஹேமந்த் சோரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டுமுதல் டிஎஸ்ஆா் டேட்டா பிராஸஸ்ஸிங் நிறுவனம் என்ற வெளிப்பணி ஒப்பந்த நிறுவனம் மூலம், மாநிலத்தில் நடத்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்புத் தோ்வுகள், ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு ஆகியவற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்.

மேலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமிதாப் கெளஷல் தலைமையில், தோ்வு சீா்திருத்தங்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் போராட்டம் குறித்து மாநில அரசு கவலை கொண்டுள்ளது. எனவே ஜாா்க்கண்ட் போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க ஏற்கெனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

முதல்வா் ஹேமந்த் சோரனின் அறிவிப்பை வரவேற்றாலும், தோ்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை, போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே ஜேஎஸ்எஸ்சி-சிஜிஎல் தோ்வு எழுதி அரசுப் பணியில் சோ்ந்தவா்கள் மாநில தலைமைச் செயலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டால் சுமாா் 2,000 போ் தங்கள் வேலையை இழப்பா் என்று கூறி, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments