திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு!
5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாஜலபதி தாக்கல் செய்த பொதுநல மனுவில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ச.ஜோசப் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
அதேபோல், அதிமுக எம்எல்ஏ-க்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆா்.விஜயபாஸ்கர் (கரூா்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து அங்கு திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.
இதேபோல, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெயக்குமாா் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்தாலும், அவர்களது வெற்றிக்கு எதிராக தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் தனித்தனியாக தேர்தல் வழக்குகள் தொடா்ந்தனர்.
எனவே, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்பாக, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த அரசு பணம் செலவிடப்படுவதோடு, ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல் சாசன பிரச்னை ஏற்படும் எனக் கூறி, 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம், மத்திய அரசு, முதல்வர் விஜய், சட்டப்பேரவைச் செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஆக. 24-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும்(ஆக. 24) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, செப். 8 ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The Supreme Court has stated that the stay on the announcement of by-elections for five constituencies, including Trichy East, has been extended.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.