எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாடு செல்லும் முன், நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
Advertisement
Advertisement
எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் தேவையில்லாதது எனக் குறிப்பிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு கோரிக்கையை ஏற்று, பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு தொடர்பாக புலன் விசாரணையை தொடரலாம் எனவும், வேலுவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.
அதே வேளையில், வழக்கு தொடர்பாக அவருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவை, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த நீதிபதி, வெளிநாடு செல்வதாக இருந்தால் கீழமை நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் தரப்பில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அதற்கு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.