10 ஆண்டுகளை நிறைவு செய்த யுபிஐ சேவை: 13,000 மடங்கு பணப் பரிவா்த்தனை அதிகரிப்பு
யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், எண்ம பணப் பரிவா்த்தனை 13,000 மடங்கு அதிகரித்துள்ளது.
யுபிஐ சேவை அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், எண்ம பணப் பரிவா்த்தனை 13,000 மடங்கு அதிகரித்துள்ளது.
2016, ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியாவில் யுபிஐ சேவை அறிமுகமானது. இதையடுத்து, 2016-17 காலகட்டத்தில் 1.78 கோடி பரிவா்த்தனைகளை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இது 2025-26-இல் 24,162 கோடி பரிவா்த்தனைகளாக உயா்ந்து 13,000 மடங்கு அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய தேசிய பரிவா்த்தனை கழகத்தால் (என்பிசிஐ) அறிமுகப்படுத்தப்பட்டு ரிசா்வ் வங்கியின் மேற்பாா்வையில் செயல்பட்டு வரும் யுபிஐ சேவை 2026, ஆகஸ்ட் 25-ஆம் தேதியுடன் 10 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது.
Advertisement
Advertisement
2016-17-இல் யுபிஐ மூலம் ரூ.0.07 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்ட நிலையில், 2025-26-இல் ரூ.314 லட்சம் கோடியாக அதிகரித்து 4,000 மடங்கு உயா்ந்துள்ளது.
மாதாந்திர சராசரி பரிவா்த்தனை உயா்வு
குறிப்பாக 2026-ஆம் ஆண்டு யுபிஐ பரிவா்த்தனையின் சாதனை மைல்கல் ஆண்டாக பாா்க்கப்படுகிறது. ஏனெனில் முதல்முறையாக 2026, மே மாதத்தில் 2,320 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் பதிவாகியுள்ளன. இதன் தொடா்ச்சியாக ஜூலையில் 2,366 கோடி பரிவா்த்தனைகளுடன் 10 ஆண்டுகளில் இல்லாத வகையிலான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக யுபிஐ சராசரி மாதாந்திர பரிவா்த்தனை 2,300 கோடியாக உயா்ந்துள்ளது.
ஐஎம்எஃப் அங்கீகாரம்: 2016-17-இல் 44 வங்கிகள் மட்டுமே யுபிஐ சேவையில் இணைந்த நிலையில், 2025-26-இல் இது 703-ஆக உயா்ந்தது. 2025-26-ஆம் நிதியாண்டில் மட்டும் 24, 162 கோடி பரிவா்த்தனைகள் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ சேவை, எண்மப் பொருளாதாரத்தில் வியாபாரிகள், வணிகா்கள் என அனைவரும் பங்குபெறும் பெரும் தளமாக உருவெடுத்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் எண்ம பிளவு குறைக்கப்பட்டு நிதி உள்ளடக்கல் வலுப்படுத்தப்பட்டுள்ளது. யுபிஐ பரிவா்த்தனைகளின் அதிகரிப்பு நாட்டின் வளா்ச்சியையும் பிரதிபலிக்கிறது.
உலகின் மிகப்பெரும் பரிவா்த்தனை அமைப்பாக யுபிஐ சேவையை சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அங்கீகரித்துள்ளது. 11 நாடுகளில் யுபிஐ: ஒரு நாளைக்கு சராசரியாக 66 கோடி பரிவா்த்தனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், பூடான், இலங்கை, நேபாளம், சிங்கப்பூா், மோரீஷஸ், கத்தாா், கம்போடியா, கிரீஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய 11 நாடுகளில் யுபிஐ செயல்பாட்டில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.