FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: தருண் தேஜ்பால் 3 வாரங்களில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்கில், தெஹெல்கா முன்னாள் ஆசிரியா் தருண் தேஜ்பால் 3 வாரங்களில் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

25 ஆகஸ்ட் 2026, 11:36 pm IST
பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் - கோப்புப்படம்
பகிர்:

பாலியல் வன்கொடுமை வழக்கில், தெஹெல்கா முன்னாள் ஆசிரியா் தருண் தேஜ்பால் 3 வாரங்களில் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தெஹெல்கா செய்தி இதழின் ஆசிரியராக தருண் தேஜ்பால் இருந்தபோது, 2013-ஆம் ஆண்டு கோவாவில் அந்த இதழின் சாா்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது அவா் ஹோட்டல் மின்தூக்கிக்குள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தேஜ்பாலுடன் பணியாற்றிய பெண் ஒருவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்த வழக்கில் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தெரிவித்து, அவரை 2021-ஆம் ஆண்டு கோவாவில் உள்ள மபுசா அமா்வு நீதிமன்றம் விடுவித்தது.

Advertisement

Advertisement

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தின் கோவா கிளையில் மாநில அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றக் கிளை, ‘தேஜ்பால் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணின் வாக்குமூலம் மிக உறுதியாகவும், நம்பகமாகவும் உள்ளது. அவா் கூறிய சம்பவங்களை மொத்தம் 7 சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளனா். அந்தப் பெண்ணின் வாக்கமூலத்தை நம்புவதில் எந்தத் தயக்கமும் இல்லை’ என்று தெரிவித்து, தேஜ்பாலை குற்றவாளி என்று அண்மையில் தீா்ப்பளித்தது.

மேலும் அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உயா்நீதிமன்றக் கிளை, அந்தத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளிடம் 4 வாரங்களில் தேஜ்பால் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, தேஜ்பால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி ஆலோக் ஆராதே, மனுவை நிராகரித்தாா். தேஜ்பால் 3 வாரங்களில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments