ரூ.300 கோடி ட்ரோன் ஆலை! எக்ஸ் பதிவால் வெடித்த போட்டி! வெல்லுமா தமிழ்நாடு?
ரூ.300 கோடி ட்ரோன் தொழிற்சாலை அமைவது குறித்த எக்ஸ் பதிவால் தொழில் போட்டியில் குதித்துள்ளன தென் மாநிலங்கள்.
ரூ. 300 கோடி மதிப்பிலான ட்ரோன் உற்பத்தி ஆலையை எங்கு அமைப்பது என்பது குறித்த ஆலோசனைகளைக் கோரி எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட வெளியிடப்பட்ட ஒரு பதிவு, தமிழ்நாடு - ஆந்திரம் இடையே கடும் போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது.
இரு தரப்பிலிருந்தும் பல்வேறு முன்மொழிவுகள் எக்ஸ் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதில், எந்த மாநிலம் போட்டியில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புரோகுரியோ (Procurio) எனும் வளங்கள் மற்றும் உற்பத்தித் தள நிறுவனர் சந்துரு ராஜேந்திரன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு பதிவுதான் இந்த போட்டியைத் தொடக்கி வைத்துள்ளது.
Advertisement
Advertisement
அந்தப் பதிவில், தன்னுடைய முக்கிய உற்பத்தித் துறை வாடிக்கையாளர் ஒருவர் ட்ரோன் உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காகப் பல்வேறு மாநிலங்களை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது, எங்களது மிகப்பெரிய உற்பத்தித் துறை நிறுவனம், ஒன்று ரூ.300 கோடி முதலீட்டில் ட்ரோன் உற்பத்தி ஆலை ஒன்றை அமைக்க ஆர்வம் காட்டி வருகிறது. இத்திட்டத்திற்காக நாங்கள் தற்போது பல்வேறு மாநிலங்களைப் பரிசீலித்து வருகிறோம். இது குறித்து உங்களுக்கு ஏதேனும்ட பரிந்துரைகள் உள்ளனவா? என்று ராஜேந்திரன் வெளியிட்டிருந்தார்.
மேலும், ட்ரோன் ஆலையும் அமையும் மாநில அரசிடமிருந்து நீண்டகால வளர்ச்சிக்கான அரசு அனுமதிகள், தொடர்ச்சியான ஆதரவு தேவைப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு உடனடியாக பல மாநில அதிகாரிகள், அரசியல் தலைவர்களின் கவனத்தையும் பெற்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்துக்கு இடையே கிட்டத்தட்ட ஒரு போட்டியையே அது தொடங்கிவிட்டிருந்தார்.
காரணம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் தரப்பில், நேரடியாகவே அந்த ஆலையை தங்கள் மாநிலத்தில் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான வழிகாட்டுதல் தமிழ்நாடு (Guidance Tamil Nadu), மாநிலத்திலுள்ள பாதுகாப்பு மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த சூழலமைப்பு சிறப்பாக இருப்பதாக வெளிப்படுத்தியிருக்கிறது-
அது குறித்து வெளியான பதில் பதிவில், "இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த சூழலமைப்பு உள்ளது. இந்தியாவின் இரண்டு பாதுகாப்புத் தொழில் வழித்தடங்களில் (Defence Industrial Corridors) ஒன்றை உள்ளடக்கியுள்ள மாநிலம் என்பதால், இங்கு ட்ரோன் மற்றும் ஆளில்லா வான்வழி வாகன (UAV) உற்பத்தியாளர்களின் வலுவான மற்றும் வளர்ந்து வரும் கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தித் திறன்கள் மற்றும் திறமையான பொறியியல் வல்லுநர்கள் உள்ளனர்," என்று பதிவிட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல், ராஜேந்திரனுக்கு நேரடியாக தகவல்களை அனுப்பியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளத.
தமிழ்நாட்டில் ட்ரோன் ஆலை அமைய இடம் தேர்வு செய்தல், அனுமதிகள் பெறுதல், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் திட்டத்தைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் உதவுவதாகவும் அந்த அமைப்பு உறுதி அளித்திருக்கிறது.
இதற்கு பதிலளித்திருக்கும் ராஜேந்திரன், உடனடியாக வழிகாட்டுதல் தமிழ்நாடு குழுவை தொடர்புகொள்வதாகக் கூறியுள்ளார்.
மறுபக்கம் ஆந்திரம் சும்மா இருக்குமா? ஆந்திர மாநில அரசும் விரைவாகச் செயல்பட்டது. கர்னூலில் மேம்பட்ட ட்ரோன் நகரத்தை (advanced drone city) அமைப்பதற்கான அரசின் திட்டங்களை அம்மாநில அமைச்சர் நாரா லோகேஷ் நேரடியாக பதிவிட்டு, நிலம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விரைவான அனுமதிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
மற்றொரு பக்கம், பெங்களூருவில் இந்த ஆலை அமைய வேண்டும் என்று கர்நாடக தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா பல்வேறு விவரங்களுடன் சந்துருவுக்கு தகவலை வெளியிட்டுள்ளது.
இப்படி ஒரு எக்ஸ் பதிவால், தென்னிந்திய மாநிலங்களில் தொழில் போட்டி வெடித்திருப்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள். உண்மையில் இந்த ட்ரோன் ஆலை எங்கு அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
₹300 Crore Drone Plant! Competition Ignited by an 'X' Post! Will Tamil Nadu Win?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.